அரச அதிகாரிகளில் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. பதவியில் இருந்து விலகும் நிலை!
இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் நிர்வாகம், விநியோகம், நிதி மற்றும் ஹன்சார்ட் உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு சேவையிலிருந்து விலகியுள்ளது.
பதவிகளில் இருந்து விலகுபவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்றும், கடந்த வாரமும் பல அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விடைபெற்று ஏனைய துறைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
நிறுத்தப்பட்ட சலுகைகள்..
பதவி விலகிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் தனியார் துறையில் உயர் பதவிகளுக்குச் சென்றுள்ளனர்.

குறுகிய காலத்திற்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நாடாளுமன்றச் சேவையிலிருந்து விலகுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.
பெண் நாடாளுமன்ற ஊழியர்கள் அனுபவித்து வந்த விடுமுறை கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் இரத்து செய்யப்பட்டமையே சேவையிலிருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாகும்.
அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நிர்வாகம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலைமை குறித்து நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அரசாங்கம் எடுத்த பொதுக் கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக, உரிய விடுமுறைக் கொடுப்பனவை வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.