சிறையில் நாமல்.. அனுராதபுர பேரணி குறித்து மொட்டுக்கட்சி முக்கிய தீர்மானம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்றும், அவை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
நாட்டின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் நிறுவப்பட்டனவே தவிர, அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல என கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்..
சுயாதீன அரச நிறுவனங்களை அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கான கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முற்படுமானால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் தீவிர அச்சுறுத்தலாகும் என்றும், நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மதிப்பைக் கொண்டுள்ள அனைத்துக் குடிமக்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி செப்டெம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் கிடைத்தமையினால், மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் நேரடி நோக்கத்துடனேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இருப்பினும், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி எதிர்பார்த்தபடி பாரிய வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்துகிறது.