சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு
கொழும்பில் உள்ள ஒரு பிரபல பாடசாலையை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் பெண் ஆசிரியர்களின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் ஆசிரியர்கள் குழுவொன்று சட்ட உதவியை நாடியுள்ளனர்.
முன்னாள் தலைமை மாணவரின் தவறான நடத்தைக்கு அதிகாரிகள் அமைதியாக இருப்பதாகக்கூறி, சட்ட உதவியை நாடியுள்ளனர்.
ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
மாணவனின் அழுத்தம் குறித்து அதிபர் மற்றும் நிர்வாகத்திற்குத் தெரிவித்த போதிலும், அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ஆசிரியர்கள் குழு பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட மாணவர் ஆசிரியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவருக்குப் பொறுப்பான ஆசிரியரிடம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்த போதிலும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முந்தைய முறைப்பாடுகளைப் புறக்கணித்த, அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கான காரணத்தை விசாரிக்குமாறு முறைப்பாட்டுதாரர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம்
மேலும் அதிபருக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு பணம் சம்பாதித்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தற்போது பணியகத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.