இலங்கை வளங்களை சூரையாடும் இந்திய கடற்றொழிலாளர்கள்! என். எம். ஆலம் காட்டம்
தமிழகத்திலிருந்து இலங்கை கடல் எல்லையில் வந்து தொழில் செய்யும் கடற்றொழிலாளர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடுவது எந்தவிதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
இன்று(21.02.2026) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழகத்திலிருந்து இலங்கை கடல் எல்லையான ('Sea of Sri Lanka' ) கடல் பகுதியை தாண்டி, எமது கரையோரம் வரை வந்து தொழில் செய்கின்ற தமிழக கடற்றொழிலாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் 6 படகுகளும், 47 கடற்றொழிலாளர்களும் (25 பேர் ஒரு பகுதியாகவும், 22 பேர் ஒரு பகுதியாகவும்) கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ச்சியான கைகளை வலியுறுத்தி நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வந்த போதிலும், இந்த கைது என்பது ஒரு பெரிய அளவிலான நடவடிக்கைக்கு ஒரு சிறிய அளவிலான தீர்வைத்தான் அரசாங்கம் எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.
நூற்றுக்கணக்கான படகுகள் இங்கு எல்லையைத் தாண்டி வருகின்றன. ஆனால், ஓரிரு படகுகள் கைது செய்யப்படுகின்றன என்ற அழுத்தமான எங்களது கோரிக்கைக்கு அவ்வப்போது சில தீனிகளைப் போடுவது போன்று அரசாங்கம் ஓரிரு படகுகளைக் கைது செய்கின்றது.
பறிப்போகும் தமிழர்களின் உரிமை
இப்படி கைது செய்கின்ற போதும், அங்கிருக்கின்ற கடற்றொழிலாளர்கள் இதனைப் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் எமது கடல் எல்லைக்குள் வராமல் இருப்பதை தவிர்த்து கொள்வதாக இல்லை.
தொடர்ச்சியாக வருகிறார்கள், கைதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இருந்தபோதிலும், அவ்வப்போது அவர்கள் இந்த 'Sea of Sri Lanka' கடல் எல்லையைத் தாண்டி வருகின்ற போது கைது செய்யப்படுகின்ற படகுகள் தங்களுக்கு மீண்டும் தரப்பட வேண்டும்.

அத்துடன், மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா விரதங்களையும் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொண்டு வருகிறார்கள். ஒன்றை மாத்திரம் இந்த கடற்றொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தமிழக எல்லையை தாண்டி, இந்திய எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைகிறீர்கள்.
நுழைந்தால் உங்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வார்கள் என்று தெரிந்துகொண்டே ஒரு குற்றச் செயலை செய்கின்றீர்கள்.
மேலும், ஒரு எல்லை என்பது ஒரு இறையாண்மை என்பது ஒரு நாட்டுக்குரியது. அதைத் தாண்டும் போது ஒரு குற்றச் செயலை தாங்கள் செய்கின்றோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல், வெறுமனே கடல் எல்லையைத் தாண்டும் போதாவது அவர்கள் தாங்கள் இன்னொரு உறவாக இருக்கும் தமிழக மக்கள், இங்குள்ள தமிழ் மக்களின் உரிமையை பறிக்கின்றோம்.
இலங்கைக்கான வளங்களை சூரையாடும் இந்தியர்கள்
அவர்களின் வாழ்வாதாரத்தை கை வைக்கின்றோம் என்ற எந்த சிந்தனையற்ற வகையிலே எல்லையைத் தாண்டி வருவது மாத்திரமல்லாமல், எமது வளங்களை சூறையாடுவதும், வளங்களை நாசம் செய்வதும், கடல் உபகரணங்களையும் வலைகளையும் சேதப்படுத்துவது போன்ற குற்றங்களை நீண்ட காலமாக செய்து வருகிறார்கள்.
இதனைத் தடுப்பதற்காக நாங்கள் வலியுறுத்தி வருகின்ற போதிலும், அவர்கள் இந்த குற்றச் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

எனவே, இந்த கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக இந்தக் குற்றச் செயல்களை செய்து கொண்டு தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது. எனவே தமிழக அரசு, இந்தத் தொழில் முறையை இலங்கை கடல் பரப்புக்குள் எல்லை தாண்டிச் செல்வதை தடுக்க வேண்டும்.
அதே போன்று, மத்திய அரசும் ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். இலங்கை கடல் பரப்பு என்பது அவர்களுக்கு இறையாண்மைக்குரியது. அதில் அவர்கள் செல்லும் போது கைது என்பது தவிர்க்க முடியாதது. ஒரு குற்றச் செயலை செய்துவிட்டு அதை நியாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.
எனவே இந்த கைது என்பது நியாயமானது. அவர்கள் மீண்டும் மீண்டும் வரும்போது இலங்கை கடற்படை கைது செய்யும், கைது செய்யப்பட வேண்டும். அது அவ்வாறல்ல, மீண்டும் தொகையான படகுகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வருகை இந்த கடல் பரப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரை இந்த கைது நடைபெற வேண்டும் என்பது எமது தெளிவான கோரிக்கையாகும்.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம்
அண்மையில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் ஊடக மையம் வாயிலாக சில விஷயங்களைத் தெரியப்படுத்திய போது, கடற்றொழில் அமைச்சர் இந்திய கடற்றொழிலாளர்கள் விடயத்தில் அசமந்தமாக செயல்படுகிறார். அவரின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக வட பகுதியில் இருக்கும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
அது தொடர்பாக அவர் மௌனம் சாதிப்பது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தோம்.

அவருக்கு எதிராக இந்தச் செயல்பாடு நிறுத்தப்படாத பட்சத்தில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அவர் அழுத்தம் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிக்காத வரையில், அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற கருத்தை அங்கே பதிவு செய்திருந்தோம்.
எனவே இந்திய கடற்றொழிலாளர்கள் விடயத்தில் நாங்கள் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. அவர்களை ஒரு வினாடி தானும் எமது கடல் பரப்பில் அனுமதிக்க முடியாது.
இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் கடல் வளத்தை சுரண்டுவதும், ஆதிக்கம் செலுத்துவதும், அதற்கு எதிராக கைது செய்யப்படும்போது போராட்டத்தை முன்னெடுப் எதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இந்த விடயத்தில் தலையிட்டு, அமைச்சர் இதில் எந்தளவுக்கு கவனம் செலுத்துகின்றாரோ, அதேபோல் இலங்கை கடற்படையை நாங்கள் நம்புகிறோம். இந்த கடற்படை தங்களது எல்லையில் சரியான கண்காணிப்பு நடைமுறையில் ஈடுபட்டு, இந்த இந்திய கடற்றொழிலாளர்கள் வருகையை முற்றாக நிறுத்த வேண்டும்.
தொடர்ச்சியாக இந்தக் கைது மூலம் தான் எங்களால் இதை நிறுத்த முடியும் என்பது நிச்சயமாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என காட்டம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 18 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri