மூதூர் ஊடகவியலாளர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் புயல் நிவாரணப் பகிர்வு தொடர்பாக நிலவும் முரண்பாடுகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஊடகவியலாளர் இன்று (11.2.2026) பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தனியார் வானொலி மற்றும் ஊடக நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் குறித்த ஊடகவியலாளர் மீது, மூதூர் பிரதேச செயலாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டு
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அதிகாரிகளின் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: "மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வரும் கடமையை ஊடகவியலாளர்கள் செய்கின்றனர். ஆனால், அதிகாரிகள் அந்தப் பொறுப்பைச் சரியாகச் செய்வதில்லை.
பொலிஸ் விசாரணை
மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 330 பேருக்கு மாத்திரமே தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர்களிடம் முறையிடுகின்றனர்.
மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது, அதனைப் பாதுகாப்பதும் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதும் ஊடகவியலாளர்கள் தானே. இந்த உண்மையை அந்த அதிகாரி மறந்துவிட்டாரா, பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பு நியாயத்தை வெளியில் கொண்டு வந்ததற்காக இன்று நான் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன்," எனத் தெரிவித்தார்.