தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மூன்றாவது நாளாக அனுஷ்டிப்பு..!
ஈழப்போர் இறுதிக்கட்டத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, திருகோணமலை - பாட்டாளிபுரம் பகுதியில் நேற்று(12.05.2026) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
17ஆவது ஆண்டு நினைவேந்தல்
திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், போரில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு, மலர் தூவி தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
போர்க்காலத்தின் போது உணவின்றித் தவித்த மக்களின் பசி போக்கிய அடையாளமாகவும், அந்தத் துயரத்தின் சாட்சியாகவும் விளங்கும் "முள்ளிவாய்க்கால் கஞ்சி" காய்ச்சப்பட்டு, அங்கிருந்தவர்களுக்குப் பரிமாறப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடைகளும், கெடுபிடிகளும் நிலவி வரும் சூழலிலும், திருகோணமலை பாட்டாளிபுரத்தில் எந்தவித சலனமுமின்றி உணர்வுப்பூர்வமாக இந்த அஞ்சலி நிகழ்வு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
வவுனியா - திருநாவற்குளம்
வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட விவசாய கல்லூரி மாணவர்களின் நினைவேந்தலும் முள்ளிவாய்ககால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா - திருநாவற்குளம், 03ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

2006ம் ஆண்டு ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முள்ளிவாய்கால் பகுதியில் மரணித்தவர்கள் ஆகியோருக்கும் இதன்போது உணர்வு பூர்வமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
படுகொலைச் செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி
நிகழ்வின் ஆரம்பத்தில் போரில் மடிந்த உறவுகளுக்காகவும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போர்க்காலத்தின் வலிகளையும் பட்டினியையும் நினைவூட்டும் குறியீடாக அமைந்த 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சியிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல் - திலிபன்
கொக்கட்டிச்சோலை
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, 'தமிழின அழிப்பு நாள்' நேற்று(12.05.2026) கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்த்தை உணர்வு பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொட்டும் மழையிலும் அஞ்சலி
இதன்போது, மழையையும் பொருட்படுத்தாது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்கால சந்ததியினருக்கும் கடந்த 17 வருடத்துக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் விளங்கப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் எதிர்வரும் மே 18ஆம் திகதி வரை இந்த கஞ்சி வழங்கும் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - பவண்
அம்பாறை
தமிழின அழிப்பின் அடையாளமாக பார்க்கப்படும் முள்ளிவாய்க்கால் கோர சம்பவத்திற்கு 17ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வாரத்தின் மூன்றாவது நாளாக நடக்கும் நினைவேந்தல் நிகழ்வு அம்பாறை மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“மே 18” என எழுதப்பட்ட சிரட்டையில் கஞ்சி பகிர்வு
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அங்கு கஞ்சி காய்ச்சி முன்னால் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு “மே 18” என எழுதப்பட்ட சிரட்டையில் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக தகவல் - சிஹான் பாரூக்
நாவிதன்வெளி பிரதேச சபை
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் இன்று(13.05.2026) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 11வது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் காலை 9:30 மணியளவில் சபா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச சபையிலும் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, அங்கு உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

கூட்டத்தின் போது சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளித்த தவிசாளர், பிரதேசத்தின் கல்வி மேம்பாடு குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்.
இதன்படி, எமது பிரதேசத்தில் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன சமூக நிலையங்கள் ஊடாக நூலகங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அவை இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு தன்னார்வலர்கள் சேவை மனப்பாங்குடன் முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - சிஹான் பாரூக்