இலங்கையின் பல பாகங்களுக்கு கடுமையான மழை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 6:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த விசேட அறிவித்தல் மாலை 3:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகத் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சபரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் வெளியிட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.