ஏமாற்று அரசாங்கத்தை சம்பந்தர் ஐயா பாதுகாத்தார்! வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தாரா..
கடந்த நல்லாட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் இரவு பகலாக குளிரிலும் மழையிலும் வேலையற்ற பட்டதாரிகள் 188 நாட்கள் போராடிய போதிலும் நல்லாட்சி அரசாங்கத்தினை தாங்கிப்பிடித்த தமிழ் தலைவர்களினால் அவர்களில் 20 வீதமானவர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் 65 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். மட்டக்களப்புக்கும் தேர்தல் காலத்தில் வருகைதந்து பிரசாரத்தின்போது இந்த ஜனாதிபதிதான் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று கூறியிருந்தோம்.
பலர் இது எல்லாம் நடக்காது என கூறினர்.சில தமிழ் அரசியல் தலைவர்கள், தீர்க்கதரிசிகள் இதுவெல்லாம் நடக்கின்ற கதையா என்றார்கள். கள யதார்த்தத்தினை நாங்கள் அன்று தெரிவித்திருந்தோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வாக்கு இருக்கின்றது. இதில் இரண்டு இலட்சத்து 39ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் அன்ன சின்னத்திற்கு அளிக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கு 38ஆயிரம் வாக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன.
ஜனாதிபதி சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவது, அந்த வாக்குறுதிக்கு அமைவாக 34ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு முடிந்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான நேர்முகத்தேர்வு நடந்துகொண்டிருக்கின்றது. விரைவாக ஒரு இலட்சம் நியமனங்களும் வழங்கி முடிக்கப்படும்.
முன்னைய அரசாங்கத்தினை நாங்கள் பாதுகாத்தோம். தமிழ் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்து அவர்களுடன் நடனமாடினார்கள். ஆனால் இந்த காந்திபூங்கா முன்பாக இரவு பகலாக மழையிலும் குளிரிலும் 188நாட்கள் பட்டதாரிகள் போராடியபோது அவர்களில் 20 சதவீதமானவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஜனாதிபதி ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவேன் என்று கூறியிருந்தார். இது சத்தியமா, பொய்பேசுகின்றார்கள் 50ஆயிரம் பேருக்கு ஒரே தரத்தில் நியமனம் வழங்கப்படுமா என்றார்கள்.
தற்போதுள்ள பிரதமர் முன்னர் ஜனாதிபதியாக இருந்தபோது ஒரே நாளில் 57ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கினார். அதன் பின்னர் வந்த ஏமாற்று அரசாங்கத்தினை சம்பந்தர் ஐயா பாதுகாத்த போதிலும் இந்த மாவட்டத்தில் எத்தனை வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தார் என்று சிந்திக்கவேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியதற்கு அமைவாக ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு அல்ல அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன.இ ன்னும் ஐந்தாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.