நல்லகண்ணு மறைவு: கஜேந்திரகுமார் எம்.பி இரங்கல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இ. நல்லகண்ணு தன்னுடைய 101 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி ஈழத் தமிழ் மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஈழத் தமிழர்களின் துயரங்களை வெளிகாட்டும் விதமாக இன்று(26.02.2026)அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
யுத்த நேரத்தில் கைக்கொடுத்த நல்லக்கண்ணு
அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,
2009-ஆம் ஆண்டு தமிழ்த் தேசத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு (Srilanka State) ஈவிரக்கமற்ற யுத்தத்தை நடத்தித் தமிழினப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது தமிழகம் அதற்கெதிராகக் கொந்தளித்தது.

அப்போது, தமிழகத்தின் பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து மக்களை ஒன்று திரட்டிப் பெரும் போராட்டங்களை நடத்திய 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை' தோற்றுவித்ததில் நல்லக்கண்ணு ஆற்றிய பங்கு அளப்பரியது.
அதுமட்டுமல்லாது, ஐதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதில் முன்னின்று உழைத்த பெருமகனார் நல்லக்கண்ணு ஐயாவை நாம் இன்று கனத்த இதயத்துடன் நினைவிற் கொள்கிறோம்.
அரசியல் அடக்குமுறைகளுக்கும், பெரும் பண்ணையார்களின் குடியானவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், சாதியத் தீண்டாமைகளுக்கும் எதிராக எண்ணற்ற பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியமைக்காக ஏழு ஆண்டுகாலம் கொடும் சிறைவாசம் அனுபவித்தவர்.
சிறைவாசம் அவரது கொள்கை உறுதியை மேலும் புடம் போட்டது. விடுதலையான பின்பு முன்பை விட சமத்துவ சமுதாயம் காண்பதற்கு வேகமாகயும் தீவிரமாகவும் அவர் களப்பணியாற்றியதை உலகத் தமிழர்கள் என்றும் நினைவிற் கொள்வார்கள்.
4 முறை தலைவர் பதவி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். ஆனால், நல்லக்கண்ணு ஐயாவின் நேர்மை, எளிமை, உறுதி, தன்னலமற்ற தியாக வாழ்வு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு கட்சியின் சட்டவிதியை அகில இந்திய மாநாடு திருத்தியமைத்து அவர் நான்கு முறை பதவி வகிக்க வைத்தது.

கட்சியும் மக்களும் அவர் மீது பேரன்பு கொண்டிருந்த நிலையில் அவரால் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுப் பெரும் பதவிகளைக் கூடப் பெற்றிருக்க முடியும்.
ஆனால் பதவிகளை பெற்றிடவிரும்பாத பெருந்தகையாளராக வாழ்ந்து மறைந்தார். இந்திய மக்களை மாத்திரமல்லாமல் ஈழத்தமிழர்களையும் நெஞ்சிருத்தி வாழ்நாள் முழுவதும் நல்லணக்கண்ணுவுக்கு தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் ஈழத் தமிழ் மக்களின் சார்பில் எமது செவ்வஞ்சலியைச் சிரந்தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.