மலேசியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு! பயிற்சி மையம் உருவாக்கம்!
மலேசியாவுக்கு இலங்கையர்கள்
மலேசியாவில் தொழில் வாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு, சிறப்பு பயிற்சி மையத்தை விரைவாக நிறுவுவது தொடர்பாக மலேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இலங்கையின் தொழில் அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய் ஆகியோருக்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் , இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன.
2016 இல் உடன்படிக்கை
2016ஆம் ஆண்டு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த போது இரு நாடுகளுக்கும் இடையில் மலேசியப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்தநிலையில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு இலங்கையின் அமைச்சர், மலேசிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பதிலளித்த மலேசிய உயர்ஸ்தானிகர், மலேசிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச சம்பளத்தை உள்ளடக்க முடியும் எனவும் இலங்கை அமைச்சரிடம் தெரிவித்தார்.



