தாமதிக்கப்படும் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை..
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி கையளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த 9ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டிருந்தது.
இதற்காக, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் திரட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சில பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்த தகவல்களையும் சேகரித்து காத்திரமானதொரு பிரேரணையை முன்வைக்கும் நோக்கத்திலே நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வு
தரம் 6 ஆங்கிலப் பாடத்தில் வயது வந்தோர் வலைத்தளத்துக்கான இணைய இணைப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதனை மையப்படுத்தியே கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.
எனினும், கல்வி மறுசீரமைப்பைச் சீர்குலைப்பதற்கான எதிரணிகளின் சதி நடவடிக்கை இதுவென நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளுங்கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதத்துக்குரிய இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.