ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற நான்கு கடற்றொழிலாளர்களை காணவில்லை: உறவினர்கள் விசனம் (Photos)
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள்களும் இன்று வரை கரைக்கு திரும்பவில்லை என்று கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று (13.10.2022) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன கடற்றொழிலாளர்கள்
வாழைச்சேனையை சேர்ந்த கே.யூ. அஸ்ஸனலி, அவரது மகன் ஏ.எம்.முஹாஜித் மற்றும் எம்.எச்.எம்.றிஸ்வி, பி.எம்.இர்ஷாத் ஆகிய கடற்றொழிலாளர்களே படகில் பயணம் செய்து காணாமற் போயுள்ளனர்.
மேற்குறித்த கடற்றொழிலாளர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கடற்றொழிலாளர் சங்கத்தினர், காணாமல்போனவர்களின் உறவினர்களும் கொண்டு வந்திருந்த போதிலும், தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமற்போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உறவினர்கள் விசனம்
கடந்த (25.09.2022)ஆம் திகதி படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் எவ்விதத் தொடர்புகளுமின்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் காணாமல் போன கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



