ஈரானில் விழுந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி: 4 பேர் உயிரிழப்பு
மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள டோர்சே நகரில், இராணுவ உலங்குவானூர்தி ஒன்று பழச்சந்தை பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(24.2.2026) இடம்பெற்றுள்ளது.
விமானத்தை இயக்கிய கர்னல் ஹமீத் சர்வசாத் மற்றும் மேஜர் முஜ்தபா கியானி ஆகிய இரு அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே பலியானதாக இராணுவ விமானப் பயிற்சி மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
மேலும், உலங்குவானூர்தி விழுந்து தீப்பிடித்ததில் சந்தையில் உள்ள கடைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு வியாபாரிகளும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய விமானப்படையின் எஃப்-4 (F-4) போர் விமானம் ஹமதான் மாகாணத்தில் விழுந்து விபத்துக்குள்ளான ஒரு வாரத்திற்குள் இந்த இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது.
பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடமிருந்து அதிநவீன சுகோய்-35 (Su-35) போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஈரான் முயற்சித்து வந்தாலும், அவை இன்னும் வழங்கப்படவில்லை.

இந்த விபத்துக்கள் ஈரானின் வான் பாதுகாப்புத் திறனில் உள்ள சவால்களை வெளிப்படுத்தும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஈரான் தனது ஏவுகணைத் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தாலும், அணு ஆயுதங்களைத் தவிர்க்கும் ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.