வரலாறு காணாத பனிப்புயல்: 5000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வீசிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 5,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது
மேலும் 2000 விமானங்கள் இரத்துசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு
நியூயோர்க், மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் தீவு உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

குறிப்பாக, ரோட் தீவு (Rhode Island) மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் சில பகுதிகளில் சுமார் 37 அங்குலம் (94 செ.மீ) வரை பனி கொட்டியுள்ளது. இது ரோட் தீவு மாநில வரலாற்றிலேயே பதிவான மிக மோசமான பனிப்புயலாகக் கருதப்படுகிறது.
தலைநகர் பிராவிடன்ஸில் 36 அங்குல பனி பதிவாகி, 1978-ஆம் ஆண்டு நிலவிய சாதனையை முறியடித்துள்ளது. நியூயோர்க்கின் சென்ட்ரல் பூங்காவிலும் 19 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதால், போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பனிப்புயல் காரணமாக நியூஜெர்சி மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்களில் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றன.
அவசியமற்ற பயணங்களுக்குத் தடை
"ஒயிட்-அவுட்" (White-out) எனப்படும் கண்மறைக்கும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் Visibility எனப்படும் பார்வைத்திறன் வெகுவாகக் குறைந்துள்ளதால், மாசசூசெட்ஸ் ஆளுநர் மௌரா ஹீலி அவசியமற்ற பயணங்களுக்குத் தடை விதித்துள்ளார்.
கனெக்டிகட் மற்றும் நியூஜெர்சி மாநிலங்களிலும் இதே போன்ற பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் மரங்கள் விழுந்து கிடக்கக்கூடும் என்பதால், மீட்புப் பணிகள் சவாலாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா முழுவதும் சுமார் 5,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) மற்றும் ஜே.எஃப்.கே (JFK) விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய 90 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
போஸ்டன் மற்றும் பிலடெல்பியா விமான நிலையங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை வரை பனிப்பொழிவு தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NWS) தெரிவித்துள்ளதால், மேலும் 2,000 விமானங்கள் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
வடக்கு கரோலினா முதல் மெய்ன் வரை நீடிக்கும் இந்தப் பனிப்புயல் எச்சரிக்கை, தற்போது கனடாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.