தோல்விகளால் தடுமாறும் சென்னை அணியை எளிதில் வீழ்த்திய மும்பை அணி
ஐபிஎல் தொடரின் 38ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்துள்ளது. குறித்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மும்பை இந்தியன்ஸ்(MI), சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ்அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
சென்னை அணி
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி 15 பந்தில் 32 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷேக் ரஷீத் 19 ஓட்டங்களில் வெளியேறினார். 4ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்து விளையாடிய ஜடேஜா-ஷிவம் துபே ஜோடி 79 ஓட்டங்கள் சேர்த்தனர்.
ஷிவம் துபே அரை சதம் கடந்து ஆட்டமிழக்க ஜடேஜா அரை சதம் கடந்து 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ்
இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அரை சதம் கடந்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 177 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா 76 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த தொடரில் மும்பைக்கு கிடைத்த 4வது வெற்றி ஆகும். சென்னை அணியின் 6வது தோல்வி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |