கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்! நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை (Video)
மகிழடித்தீவில் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டித்ததாக கூறி கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுதலை
நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நேற்று (13.10.2022) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது 10ஆயிரம் ரூபா பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேசும் நீதிமன்றத்தில் நேற்று (13.10.2022) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வு
கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மகிழடித்தீவு நினைவுத்தூபியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவினை பெற்றிருந்ததாகவும் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் மீறியுள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பிடியாணையினையும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் நீதிமன்றம் ஊடாக பெற்றுள்ளனர்.
தடையுத்தரவு
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் எவ்வித தடையுத்தரவோ, நீதிமன்ற அழைப்பாணையோ தமக்கு இதுவரையில் வழங்கப்படாத நிலையில் பொலிஸார் தமக்கு எதிரான பிடியாணையினை நீதிமன்றில் பெற்றிருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வினை தாங்கள் அனுஸ்டித்தபோது எந்தவித தடையுத்தரவும்
வழங்கப்படவில்லை எனவும் குறித்த நிகழ்வு தொடர்பில் எந்தவித நீதிமன்ற நடவடிக்கை
தொடர்பான அறிவித்தல்களும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







