சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்!
சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண் பெண் அதிகாரிகள் பலருக்கு உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்தின் ஆண் அதிகாரிகளில் 77 வீதமானோருக்கும், பெண் அதிகாரிகளில் 56 வீதமானோருக்கும் உடலியல் பலவீனங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொற்றா நோய்கள் பரவல் குறித்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் கண்டறியப்பட்ட இந்த நிலைமை, ஒரு தீர்மானமிக்க அபாயகரமான சூழல் என தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆண் சிறைச்சாலை அதிகாரிகளில் சுமார் 29% பேர் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும், 26% பேர் வெற்றிலை/பாக்கு உபயோகிப்பவர்களாகவும் உள்ளனர். பெண் அதிகாரிகளில் 5% பேர் பாக்கு உபயோகிக்கின்றனர்.
ஆண் அதிகாரிகளிடையே மது அருந்தும் பழக்கம் மிக அதிகளவில் காணப்படுகிறது.
இத்தகைய பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் வாய் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண் அதிகாரிகளில் 28% பேருக்கும், பெண் அதிகாரிகளில் 16% பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
ஆண் மற்றும் பெண் அதிகாரிகளில் தலா 14% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண் அதிகாரிகளில் 13% பேருக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு இருப்பதுடன், சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்பு நிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டின் (2024) ஆகஸ்ட் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தொற்றா நோய்கள் தொடர்பான இந்தச் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.