சஜித் பலத்தைக் காட்டும் வரை நாமலே எதிர்க்கட்சித் தலைவர் - நுகேகொடை பேரணி குறித்து மனோ கருத்து
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ, இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டிக் காட்டும் வரை, நாட்டிலே நாமல் ராஜபக்ஷதான் எதிர்க்கட்சித் தலைவர் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பேரணி தொடர்பில் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பலத்தை காட்டியுள்ள மொட்டு
அந்த பதிவில் மேலும், "நிகழ்வு ஆரம்பிக்க, முன் - பிடித்த, பின் – பிடித்த, படங்களைப் போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பப்படி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம். அவரவர் விருப்பம் வேறு. உண்மை வேறு. இதை நாம் பகுத்து அறியனும். சில மாதங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50 பேரைக் கூட, திரட்ட முடியா நிலையில், இருந்த நாமலின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, இன்று ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து, தம் பலத்தைக் காட்டியுள்ளது.

என் வீட்டில் இருந்து நடை தூரம், நுகேகொடை சந்தி. நடக்காமல், நேரடி தகவல். கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். நமக்கு “சரி வராது சகோதரர்” என மறுத்து விட்டோம்! இந்தக் கூட்டத்தை வைச்சு, அங்க யாரும், அரசை உடனடியாகக் கவிழ்க்க ஏலாது. அது கலர் கனவு! மேடையிலும், அப்படி சொல்லப்படவில்லை. ஆனால், தான் கப்பல் கட்டுவது “ஹார்பரில்” தரித்து நிற்க அல்ல, ஆழ்கடலில் ஓடத்தான் என நாமல் சொன்னார்.
பிரதான எதிர்க்கட்சி யார்?
இது, அரசுக்குச் சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர்க்கட்சி யார் என நிலை நாட்டுவதே அங்கே முதல் கனவு! இதன் மூலம் இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மகாஜனம், சில செய்திகளைத் தந்தது.
(1) 2019 இல் கோட்டாவுக்கும், பின் 2024 இல் அநுரவுக்கும் வாக்களித்த, அதே 69 இலட்சம் மக்கள், விரும்புனா, தாய் வீடு திரும்பலாம். எந்நேரமும் மாறலாம். மாறாமலும் விடலாம். எப்படியும், இங்கே நாம் தான் எஜமானர். எங்கள் “தேசாபிமானம்” தான் இங்கே “பிரைம் சப்ஜெக்ட்”!
(2) சிறுபான்மை சில்லறைகள் மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கனும்! அல்லது ஓரமா போய் விளையாடனும்!
(3) நாடாளுமன்ற, எதிர்க்கட்சித் தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை வெளியே கூட்டிக் காட்டும் வரை, நாட்டிலே நாமல்தான் “ஒபொசிசன் லீடர்!" - என்றுள்ளது.