மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்(Photos)
மன்னார் மற்றும் மடு வலய கல்விப் பணிமனைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம்(09) காலை 8.30 தொடக்கம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மன்னார், நானாட்டான், மடு, முசலி, மாந்தை மேற்கு பகுதிகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கையில்,
25 வருடங்களுக்கு மேலாக முன் பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றி வருகின்ற நிலையில் இது வரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வில்லை.
முன் பள்ளிகளில் பல தரப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்கு தங்களைப் பயன்படுத்துகின்ற போதும் தங்களுக்கு மாதம் வெறுமனே 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி, ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தங்கள் கோரிக்கைகளை மகஜர்களாகவும் நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ள போதும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.
ஆகவே விரைவில் எங்களுடைய கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும், 6000 ரூபா ஊக்குவிப்பு தொகை இன்று போதுமானதா?, நிரந்தர நியமனம் வேண்டும், முன்பள்ளி கல்வி முக்கியம் முன்பள்ளி ஆசிரியர்கள் முக்கியம் இல்லையா போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








