யாழ் - மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் அமைதியின்மை
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஒலியமைப்பு சீரின்மை, காரணமாக பின்னால் இருந்த உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்காததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(23.01.2026) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
கோரிக்கை
இதன்போது இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் த.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,
சபை மண்டபத்தில் படம்காட்டும் கருவி (Projector) உள்ளது. ஆனால் அது இயக்கப்படுவது இல்லை. கடந்த கூட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அதனை படம்காட்டும் கருவி (Projector) மூலம் காண்பித்தால் நன்று.

கடந்த கூட்ட அறிக்கையில் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கூறும்போது ஒலிவாங்கி சீரின்மையால் பின்னால் இருப்பவர்களுக்கு விளங்கவில்லை.
ஆகவே படம்காட்டும் கருவி (Projector) இனை இயங்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பின்னால் இருந்த உறுப்பினர்களும் தமக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் விளங்கவில்லை என்ற சத்தமிட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த தவிசாளர், இதுவரை அவ்வாறான நடைமுறை இல்லை. அப்படி காண்பிக்க முடியாது. அனைவருக்கும் அறிக்கை தரப்பட்டுள்ளது என்றும், ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கியை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான பிரேரணையானது இன்றையதினம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனால் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணையானது நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டம்
குறித்த பிரேரணையில் தவிசாளர் தனது கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமானது எமது இனத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தவுள்ளது.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி இந்த சட்டமானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமானது இதற்கு முன்னர் இருந்த இரண்டு சட்டங்களை விடவும் மிகவும் கொடூரமான சரத்துக்களை கொண்டதாக காணப்படுகின்றது.

தற்போது அரசானது தேர்தல் வாக்குறுதிகளின்போது, தாம் ஆட்சிக்கு வந்ததும் பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்குவதாக தெரிவித்தது. அதனை நிறைவேற்றுவது போல் அந்த சட்டத்தை விட மிகவும் மோசமான சட்டத்தை கொண்டு வர உள்ளது.
எனவே அந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்ற பிரேரணையை நான் இந்த மானிப்பாய் பிரதேச சபையில் கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பிரேரணை நிறைவேற்றம்
குறித்த பிரேரணை தொடர்பாக உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதனை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

அதன் பின்னர் பிரேரணையானது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்களும் பிரேரணை குறித்து நடுநிலை வகித்ததுடன், சபையில் இருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன் குறித்த பிரேரணையான நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜாசக்திக்கு எதிரான பிரேரணையும் மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்வைப்பு
குறித்த பிரேரணையை இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ரமணன் சபையில் முன்வைத்து கருத்துரைக்கையில்,
இந்தப் பிரஜாசக்தி என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் அபிவிருத்திகளை செய்து வருகின்ற போதிலும் அரசியல் நோக்கத்திற்காக இந்த குழுவானது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மத்தியிலும் சமூக அமைப்புகளின் மத்தியிலும் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளானது சுயாதீனமாக இயங்குகின்ற கட்டமைப்பை கொண்டுள்ள நிலையில், எந்த சந்தர்ப்பத்திலும் இந்த குழுவானது இயங்க முடியாது.

கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டு வரும் பிரஜாசக்தியை என்ற அமைப்பானது எமது சபையின் விதி மற்றும் நிர்வாக கட்டமைப்புகளிலும் எந்தவொரு சிபாரிசுகளையும் கோர முடியாது என இந்த சபையில் பிரேரணையை முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
பிரஜாசக்தி பிரேரணை நிறைவேற்றம்
இதன்போது, குறித்த பிரேரணை மீது உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் பிரேரணையானது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராகவும், சபையில் இருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்த நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
