பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் பலி!
வெலிக்கந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(12.1.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் மீதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், குறித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றதுடன், அதன் செலுத்துனர் பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குச் சென்றபோது, அவர் மன்னா கத்தியால் பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ளார். இதன்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் கால் மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இதற்கு முன்னர் 7 போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபராக காணப்பட்டதுடன், தற்போது மேலும் இரண்டு குற்றவியல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இருவரையும் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22