இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! இலவச வருகை சுற்றுலா விசா வசதியை அறிவித்துள்ள வெளிநாடு
சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்(Maldives) செல்வதற்காக இலங்கை குடிமக்களுக்கு 90 நாட்களுக்கான இலவச வருகை சுற்றுலா விசாக்கள் வழங்கப்படும் என மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்துக்கு இணையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலவச வருகை சுற்றுலா விசாக்கள்
இந்த விசா வசதி ஜூலை 29 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன் விசாவைப் பெற, இலங்கை பயணிகள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருக்க வேண்டும் என்பதுடன் மாலைதீவில் தங்கியிருக்கும் போது அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமான நிதியையும் கொண்டிருக்க வேண்டும்.
மாலைதீவு அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த முயற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.
இது மாலைதீவு அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான விசா வசதி வழங்குதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கும், மாலைதீவின் குடிவரவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கும் உட்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம், இலங்கையுடனான இருதரப்பு உறவில் தாங்கள் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது என மாலைதீவு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.



