சிறைச்சாலையில் ஜம்பருடன் வேலைகளை செய்யும் முன்னாள் அமைச்சர்கள்
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலையின் அச்சுத் துறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலை கண்காணிப்பாளர் இன்று அல்லது நாளை அவர்களுக்கு வேலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஜம்பர்களை நேற்று இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கும் வழங்கியதாக சிறைச்சாலை ஆணையர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடியில் ஈடுபட்டமைக்காக முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
குறித்த இருவரும் நீண்டகாலமாக சிறையில் வாழும் கைதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.