தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக அணித் திரண்டெழுவோம்: எம்.ஏ.சுமந்திரன்...!
“தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சிக்கு எதிராக நாங்கள் அணித் திரண்டெழுவோம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒன்று நேற்றைய தினம் (19.02.23) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி
மேலும் இதுகுறித்து எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது, மக்கள் தேர்தல் நடக்குமா என்று கேட்கின்றார்கள்...
ஜனாதிபதிக்குத் தேர்தலைச் சந்திக்கப் பயம்... இந்தக் காரணத்தினால் தேர்தலைப் பிற்போடப்பாக்கின்றார்கள்... மாகாணசபை தேர்தலையும் பெரும் சூழ்ச்சியால் காலவரையறையின்றி பிற்போட்டுவிட்டார்கள்.
2019ஆம் ஆண்டுத் தனிநபர் சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்தோம், மாகாணசபை தேர்தலைச் செய்ய முழு பிரயத்தனத்தினையும் எடுத்துள்ளோம்.
இப்போது அவர்கள் என்ன செய்கின்றார்கள்... மாகாண அதிகாரமும் கிடையாது. உள்ளுராட்சி அதிகாரங்களைப் பறித்து எடுத்துவிட்டு, மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியாக வந்த ஒருவர், முழு நிறைவேற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் சூழ்ச்சிதான் தேர்தலைப் பிற்போட எடுக்கப்படும் சூழ்ச்சி... இதற்கு எதிராக நாங்கள் அணித் திரண்டெழுவோம்.
தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற கேள்விக்குறிக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்வதற்கான காரணமும் அதுதான். தேர்தல் நடக்க வேண்டும், நடத்த வைப்போம் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல் பிற்போடப்பட்டால் அந்தக் குள்ளநரித்தனத்தினையும் வெளிக்கொண்டு வருவோம்.
தேர்தலை நடத்த வேண்டும்
மக்கள் விருப்பமில்லாமல், மக்கள் ஆணை இல்லாமல் எவரையும் ஆட்சிசெய்ய முடியாது. அதுதான் எங்களின் அரசியல் சித்தாந்தமும் கூட.
ஆட்சியாளர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள்... தேர்தல் வந்தால் மக்கள் அவர்களைத் தூக்கிக் கடாசி விட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாகத் தெரியவரப் போகின்றது. அத்துடன், ஜனாதிபதிக்கு எள்ளளவும் மக்கள் ஆணை கிடையாது என்பது தெரியவரப்போகின்றது. அதனால்தான் தேர்தலை எதிர்நோக்கப் பயப்படுகின்றார்கள்.
அதே காரணத்திற்காக நாங்கள் அந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்கின்றோம்.
தெற்கு மக்கள் தங்களின் அரசியல் எதிர்பார்ப்பினை வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் அன்று தொட்டு இன்றுவரை சுயாட்சிக்காகவே நாங்கள் வாழ்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி க.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, க.சிவமோகன் முன்னாள் வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், வேட்பாளர்கள் உள்ளிட்டதமிழ்அரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
