காத்தான்குடியில் இளம் யுவதிக்கு நேர்ந்த கதி! சந்தேகநபரான சட்டத்தரணிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இளம் யுவதி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 24 வயதுடைய இளம் யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு
மேலும், குறித்த வழக்கின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காததாக கூறப்படும் பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பிரதேசத்தில் வசித்து, மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணியாக கடமையாற்றி வரும் ஒருவர், தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் பணியாற்றிய வந்த அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பலாத்காரமாக கற்பழித்து மூன்று மாத கர்ப்பிணியாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி குறித்த சட்டத்தரணி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார். அப்போது, அவரை பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
உயர்மட்ட விசாரணைக்குழு
இந்நிலையில், குறித்த சட்டத்தரணி மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையிலான சட்டத்தரணிகளான யோகேஸ்வரன், உவைஸ், ரூபி, உதயாகரன், சுதர்சன், கமலதாசன், நஜீபா, ரம்சீயா, தவராசா மற்றும் சசிதரன் ஆகியோர் ஆஜராகி தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாக பொலிஸார் நீதவானிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக விசாரணைகள் முழுமையடையவில்லை என பொலிஸார் அறிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகளை கைது செய்யவும், உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் கட்டளை பிறப்பித்தார்.
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam