இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு முதல் நாளிலேயே அதிர்ச்சி கொடுத்த நபர்
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து நூதமான முறையில் மேற்கொள்ளப்படும் மோசடி ஒன்று அம்பலமாகி உள்ளது.
வெளிநாட்டவர்களிடம் அனுதாபம் தேடும் வகையில், தமது சோகத்தை வெளிப்படுத்துவதுடன், கஷ்டத்தை போக்க பொருட்களாக உதவி வழங்குமாறு கோருகின்றனர்.
அந்த வகையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு தம்பதி ஒன்றுடன், முதல் நாளிலேயே, மனோஜ் என தன்னை அடையாளப்படுத்திய நபர், உதவி கோரியுள்ளார்.
சுற்றுலா பயணிகளிடம் திருட்டு
கொழும்பு, காலி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியை அணுகி மனோஜ், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மகள்களைக் காப்பாற்றத் தான் கஷ்டப்படுவதாகவும் உருக்கமாகக் கூறி உதவி கோரியுள்ளார்.

தன்னிடம் பணம் வேண்டாம் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவிக்காக அருகிலுள்ள சுப்பர் மார்க்கெட்டில் அதிக புரதச்சத்துள்ள பால்மா மட்டும் வாங்கித் தருமாறும் அவர் கேட்டுள்ளார்.
மனோஜ்யின் உருக்கமான கதையை கேட்ட தம்பதி, அவரை சுப்பர் மார்க்கெட் ஒன்று அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது தனது வீட்டுக்கு தேவையான பால்மா பக்கெட்டுகள், அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் தேங்காய்ப்பால் மா போன்ற பொருட்களை மனோஜ் கொள்வனவு செய்துள்ளார்.
இந்நிலையில் "உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எதையும் கேள்வி கேட்காமல் சுமார் 15,000 ரூபா பணத்தைச் செலுத்தினேன்" என பாதிக்கப்பட்ட சுற்றுலா தம்பதி தமது டிக்டொக் காணொளியில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இதனை நூதனமான திருட்டு என தெரிவித்துள்ள பலர், விலையுயர்ந்த மளிகைப் பொருட்களை இவ்வாறு வாங்கிக் கொண்டு, பின்னர் அவற்றை மீண்டும் அதே கடைக்கோ அல்லது வேறு இடங்களிலோ விற்றுப் பணமாக மாற்றிக்கொள்வது கொழும்பில் நடக்கும் ஒரு பொதுவான மோசடி எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.