விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ள நிலங்கள்: பாதிக்கப்பட்டோர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)
நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வேளை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 15ஆயிரம் ஏக்கர் பொன் விளையும் பூமி விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு இந்தக் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் உணவு உற்பத்திக்காகக் கையளிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காணிகளை இழந்த பாதிக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு அட்டாளைச்சேனை மனித எழுச்சி அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
விவசாய நிலங்கள் அபகரிப்பு
அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைப்பின் அம்பாறை மாவட்ட நில உரிமைக்கான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,
நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும் என்று துறைசார்ந்த நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உணவு உற்பத்தியில் சிறப்பான பங்கை வகித்த பொன் விளையும் பூமிகளான எமது காணிகள் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, ஜனாதிபதியின் உத்தரவைக் கருத்திற் கெண்டு எமது காணிகளை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்து மீண்டும் இந்த நாட்டுக்கு பெரும் உணவு உற்பத்தியை மேற்கொண்டு பொருளாதார உணவு நெருக்கடிக்குப் பங்களிப்புச் செய்யும் சந்தர்ப்பத்தை அதிகாரிகள் எமக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
காணிகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள்
திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
இது விடயமாகக் கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் இந்தக் காணிகளை மீட்டெடுப்பதற்கான முன் முயற்சிகள் தொடரும் என அங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கே. நிஹால் அஹமட் உட்படப் பிரதேச பாணி இழந்தோர் அமைப்புக்களின் பிரதிநிதிகளான விவசாயிகளும் துறை சார்ந்த செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.



