முல்லைத்தீவு உடையார்கட்டில் காணி சர்ச்சை: வணிகர்கள் உண்ணாவிரத போராட்டம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு பகுதியில் உள்ள நான்கு வணிக நிலையங்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால், குறித்த வணிக நிலையங்களை ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(30.03.2026) கடைகளின் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடைகளை அகற்ற உத்தரவு
போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள், குறித்த காணியில் நீண்டகாலமாக வாழ்வாதாரத்திற்காக கடைகள் நடத்தி வருவதாகவும், தற்போது அவற்றை அகற்றுமாறு அறிவித்திருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அரச காணியாகக் காணப்பட்ட அந்த பகுதியில் வணிகம் செய்ய அனுமதி வழங்கியிருந்ததாகவும், பிரதேச சபையிடமிருந்து அனுமதி பெற்றதுடன் பிரதேச செயலகத்திற்கு வரியும் செலுத்தி வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் திடீரென காணியை விட்டு வெளியேறுமாறு அறிவித்திருப்பது கவலையளிப்பதாகவும், முன்னர் குறித்த காணியை குத்தகைக்கு வழங்க பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்ததாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போதைய பிரதேச செயலாளர், முன்பு செய்யப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்து, குறித்த காணியை அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற நடமாடும் காணி கச்சேரியில் இந்த காணி ஆலயத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அதன்படி ஆலயத்துடன் ஒப்பந்தம் செய்து வாடகை செலுத்தி கடைகளை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த முடிவை ஏற்க முடியாது என தெரிவித்த வணிகர்கள், தங்களது நிலையை பல அரசியல் தலைவர்களிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உடையார்கட்டு முருகன் ஆலய நிர்வாகத்தினரும் ஊடகங்களை சந்தித்து காணி விவகாரம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர்.
ஆலய நிர்வாகம் உரிமையாளர்களுக்கு விடுத்த வேண்டுகோள்
அவர்கள் தெரிவிக்கையில்,
போர் முடிந்த பின்னர் குறித்த கடை உரிமையாளர்கள் ஆலய நிர்வாகத்திடம் கடிதம் எழுதி கடைகள் நடத்த அனுமதி கோரியதாகவும், பின்னர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களது பெயரில் அனுமதி பெற்று கடைகள் கட்டியதாகவும் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகம் வரை சென்ற காணிப்பிணக்காக இருந்து வந்ததாகவும், 2025 அக்டோபர் 21ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் குறித்த காணி ஆலயத்திற்கு சொந்தமானது என தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கலந்துரையாட கடை உரிமையாளர்களுக்கு ஆலய நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்தாலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடைகள் நடத்துவதற்கு தங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும், ஆனால் ஆலயத்திற்கு வாடகை செலுத்தி கடைகளை தொடர்ந்து நடத்தலாம் என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam