கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்கள்! சூட்சுமமான முறையில் கடத்தல்
தாய்லாந்திலிருந்து இந்தியா ஊடாக இலங்கைக்குள் பெருமளவிலான போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரு வெளிநாட்டவர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ 401 கிராம் எடையுடைய குஷ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 6 கோடியே 40 லட்சத்து 10 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இந்தோனேஷிய பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் 30 வயதுடைய யுவதி ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் மேற்படி போதைப்பொருளை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து இந்தியாவின் பெங்களூர் நகருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
கடத்தல் பின்னணி
இவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளையும் சோதனையிட்ட அதிகாரிகள், அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொதிகளைக் கண்டெடுத்தனர்.

இந்த கடத்தல் பின்னணியில் உள்ள சர்வதேச வலையமைப்புகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் நிறைவில் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri