மன்னாரில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos)
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மண்ணெண்ணெய் இன்மையால் மன்னாரில் கடற்தொழிலாளாளர்கள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
கடற்தொழில் நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதால் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
அதே நேரம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளது. இதனால் கடற்தொழிலாளர்கள் உட்பட மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மீன் கொள்வனவு செய்வோர் எண்ணிக்கை குறைவு
மேலும் அண்மைய நாட்களாக கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமையால் மீன் சந்தையில் மீன்களின் வருகையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக மீன் விலையும் அதிகரித்துள்ளது.
மீன் விலை அதிகரித்துள்ளமையினால் மீன்களைக் கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மீன்பிடி இன்மை மற்றும் மீன் வியாபாரம் தொடர்ச்சியாகக் குறைந்துள்ளமையினால் மீன் சந்தைகளைக் குத்தகை ரீதியாகப் பெற்று நடத்தும் குத்தகை தாரர்கள் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.
எனவே விரைவில் கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் போதிய அளவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு தருமாறு கடற்தொழிலாளர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



