வழக்கத்தை விட உள்வாங்கிய ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல்: கடற்தொழிலாளர்கள் மத்தியில் அச்ச நிலை
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்றுகாலை உள் வாங்கியுள்ளதால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி உள்ளதோடு, அடிக்கடி கடல் உள் வாங்குவதால் கடற்தொழிலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் நேற்று மாலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
கடற்தொழிலில் ஈடுபட சென்ற ஒரு சில மீன்பிடி விசைப் படகுகள், மீன் பிடித்து விட்டு இன்று காலை மீன்களை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்தனர்.
அச்சத்தின் மத்தியில் கடற்தொழிலாளர்கள்
இந்நிலையில் மீன் பிடித்து வந்த மீன்பிடி படகுகள் கடல் உள்வாங்கியதால் தரை தட்டி படகு சேதமடையும் என்ற அச்சத்தில் படகை கடற்தொழிலாளர்கள் துறைமுகம் கொண்டு வந்தனர்.
எனவே தமிழக அரசு பழமையான ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக தூர்வாரி பேரிடர் காலங்களில் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழி வகை செய்து தர வேண்டும் என கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில், கடந்த வாரம் கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் தற்போது இன்று காலை முதல் தொடர்ந்து கடல் உள்வாங்கியதால் கடற்தொழிலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வழக்கத்திற்கு மாறாகக் கடல் உள் வாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நிற்கிறது.



