ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தமிழக கடற்தொழிலாளர்களை சிறை பிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக கடற்தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன் பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களால் நேற்று புகையிரத நிலையம் முன்பு தரையில் அமர்ந்து குறித்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
15 நாட்களில் கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் தங்களது அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 கடற்தொழிலாளர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளையும், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்து கடற்தொழிலாளர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதை நிறுத்த வேண்டும்.
தமிழக கடற்தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறி பல கோடி மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை வசம் இருந்த மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததை கண்டித்து நேற்று புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் சென்னை புகையிரதத்தை மறித்து புகையிரத மறியல் போராட்டத்தில் ஈடுபட கடற்தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் மற்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதிச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் புகையிரத நிலையம் நோக்கி புகையிரதத்தை மறித்து போராட்டம் நடத்த முனைந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் புகையிரத நிலையம் முன்பு தடுப்புகள் வைத்து கடற்தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் கடற்தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புகையிரத மறியல் போராட்டத்தை விடுமாறு கேட்டனர்.
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த கடற்தொழிலாளர்கள் புகையிரத நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் வரும் 15 நாட்களுக்குள் இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் ஏலமிடப்பட்ட படகுகளை தமிழக கடற்தொழிலாளர்களிடம் மீண்டும் திருப்பி தர வேண்டும் என கடற்தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
கடற்தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து படகுகளின் உரிமம் மற்றும் கடற்தொழிலாளர்கள் இந்திய பிரஜை இல்லை என குறிப்பிடும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கூறி மீனவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.