நீண்ட நாட்களின் பின் மண்ணெண்ணெய் விநியோகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Photos)
மன்னார் - பள்ளிமுனை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யைப் பெற்று வருகின்றனர்.
குடும்ப அட்டையின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 500 ரூபாவிற்கு மண்ணெண்ணெய் இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னர் மண்ணெண்ணெய்
குடும்ப அட்டைகள் வழங்கப்படாத, இல்லாத நபர்களுக்குக் கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின்னர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாளரால் அப்பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குக் கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன், பொலிஸார் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.