நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க விசேட விசாரணைக்குழு நியமனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றைய தினம் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
நேற்று (05) பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் நீர்கொழும்பு சிறையில் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
விளக்கமறியலில் இருந்த கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே இந்த மோதல் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள், பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் ஆகியவை பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
மேலும், சிறைக்கைதிகளின் உறவினர்கள் குழுவொன்றும் சிறைச்சாலைக்கு முன்பாக வந்து, கைதிகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை என்று கூறி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டனர்.

பொலிசார் தலையிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு வழங்கினர். மேலும், மற்றொரு குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து, சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தனது கருத்துக்களை தெரிவிக்கையில்,
“நீர்கொழும்பு சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட மோதலானது, கைதிகளுக்கு இடையேயான ஒரு மோதல் மட்டுமே. அதிகாரிகளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கைதிகளின் உறவினர்கள் எந்தவிதமான பீதியையோ அல்லது தேவையற்ற அச்சத்தையோ ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார். அவர்கள் சுயாதீனமான முறையில் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.
சிறைச்சாலைக்குள் நிலவிய பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்துவதில் கைதிகளின் ஒத்துழைப்பைப் பெற்றதன் மூலம் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்போது கைதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கைதிகள் சார்பில் பல கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், அது தொடர்பில் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan