கானல் நீராகவுள்ள முள்ளிவாய்க்காலுக்கான நீதி..!
2009 மே 18 என்பது உலக தமிழர்களை மட்டுமல்ல உலக நாடுகளையே இலங்கையை திரும்பி பார்க்க வைத்த ஒரு நாள். அது இலங்கையின் பெருமையால் ஏற்பட்டதல்ல.
இலங்கை தீவில் பல்நெடுங்காலமாக வாழ்ந்து வந்த சக தேசிய இன மக்களை, பெரும்பான்மை சிங்கள பேரினவாத அரசு அடிமையாக்க இனப்படுகொலை செய்து கோர தாண்டவம் ஆடிய நாள்.
ஆம், இலங்கை தீவு தமிழர், சிங்களவர், முஸ்லிம் என பன்மை சமூகத்தைக் கொண்ட ஒரு அழகிய தீவு. மேலைத்தேச காலணித்துவத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக நாட்டை விடுவிக்கப் போராடி சுதந்திரத்தையும் பெற்றுக் கொண்டனர். அந்த ஒறறுமை சுதந்திரத்திற்கு பின்னர் மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய தென்னிலங்கை பெரும்பான்மை ஆட்சியாளர்களால் சிதைக்கப்பட்டது.
தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்க தென்னிலங்கை கங்கணம் கட்டி அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட தமிழ் தேசிய இனம் ஜனநாயக ரீதியாக உரிமைக்காக 30 வருடங்கள் போராடியது.
துர்ப்பாக்கிய நிலை
ஜனநாயக ரீதியாக போராடிய தமிழ் தலைவர்களின் கோரிக்கைகளை சிங்கள தேசம் கண்டு கொள்ளாததன் விளைவாக தமிழ் இளைஞர், யுவதிகள் தாமும் இந்த நாட்டில் சமத்துவமாகவும், சகோதரத்துவத்துடனும், சுய மரியாதையுடனும், சுய கெளரவத்துடனும் வாழ்வதற்காக ஆயுதமேந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

இதன்போது பல போராட்ட இயக்கங்கள் தேர்ற்றம் பெற்ற போதும், தமிழன் என்ற ஒற்றை சொல்லாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே மேதகு பிரபாகரன் தலைமையில் அங்கீகாரத்துடன் எழுச்சி பெற்றனர்.
சிங்கள பேரினவாதிகளின் நிலப் பறிப்புக்கள், பௌத்தமயமாக்கல் என்பவற்றுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைக்காவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வ்டக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தின் பெரும் பகுதி இருந்தது. அங்கு ஒரு நிழல் அரசாங்கம் செயற்பட்டது.
கடற்படை, தரைப்படை, விமானப்படை என தமிழினம் பரிணமித்த நிலையில அப்போதைய மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து தமிழரின் உரிமைக்கான போரை நசுக்க சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கியது.
தமிழ் மக்களின் உரிமைக் போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக சித்தரித்து அவர்களை தமிழர் தாயகப் பகுதியில் இருந்து விரட்டியடித்த நிலையில், அம் மக்கள் இறுதியாக தஞ்சம் கோரிய இடமே முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்கால்
இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையும் சோகம் நிறைந்தது. முல்லைத்தீவு மாவட்டம் பேரழிவைச் சந்தித்ததது இது முதல் முறையல்ல.

அதற்கு முன்னரும் 2004 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததால் மிகவும் மோசமாக பாதிப்படைந்த இடங்களில் ஒன்றே முல்லைத்தீவு. இதன்போது வெகுவாக பாதிப்படைந்த, இழப்புக்களை சந்தித்த மக்களை குடியேற்றிய இடமே முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி. அவர்கள் மீள்குடியேறி தமது வாழ்வை கட்டியெழுப்ப முன்னர் மீண்டும் ஒரு இடப்பெயர்வைச் 2009இல் சந்திக்க நேரிட்டது.
இதன்போது அவர்கள் மட்டுமல்ல. வன்னி மண்ணில் வாழ்ந்த அத்தனை மக்களும் வந்து தங்கியிருந்த இடமாகவும் இது விளங்கியது. தற்காலிக கொட்டகைக்குள்ளும், பதுங்கு குழிகளுக்குள்ளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினதும், அரசாங்கத்தினதும் அறுவுறுத்தல்களை நம்பி பாதுகாப்பு வலயம் என கண்ணீருடன் வந்த மக்களை கொததுக் குண்டுகளும், தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளும் பதம் பார்த்து அழித்தன. ஒரு வேளை உணவு கூட பெற முடியாத நிலையில் மக்கள் கஞ்சியே தஞ்சம் என வாழ்ந்தனர்.
பல குடும்பங்கள் கொத்து கொத்தாக மடிந்ததும், தமது உறவுகளை தொலைத்ததும், பலர் தமது அபயங்களை இழந்ததும், பலர் தாம் சேர்த்து வைத்த சொத்துக்களை இழந்ததும் இந்த மண்ணில் தான். பலர் நடை பிணங்களாக இன்றும் வாழ்வதற்கும் இந்த மண்ணே காரணம். இங்கு நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களே அந்த நிலையை உருவாக்கியது.
யுத்தம் முடிவடைந்த பின்பு முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டனர். ஆனாலும் அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீட்டுத்திட்டம், குடிநீர் என்பன முழுமை பெறாத நிலையில் இம்மக்கள் தமது வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
நீண்டகால நீதி கோரல்..
இம்மக்களின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் கடல் வளம் கூட தென்னிலங்கை மீனவர்களால் அரச இயந்திரங்களின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இறுதிப்போரின் போது தமது பிள்ளைகளையும், கணவன்மாரையும் இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என நீதிகோரி 3400 நாட்களை நெருங்கும் நிலையில் தாய்மார் வீதிகளில் இருந்து போராடி வருகின்றனர்.

இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் 17 வருடத்தை கடந்தும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் இனத்திற்கு எதிராக இனப்படுகொலை நடந்தேறிய அந்த மண் இன்றும் மக்களின் கண்ணீரால் கழுவப்பட்டுக கொண்டிருக்கின்றது. அங்குள்ள பதுங்கு குழிகளிலும், நிலங்களிலும் இருந்தும் தற்போது போரின் கொடூரத்தை வெளிப்படுத்தும் எச்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தும் அந்த மண்ணில் நடந்த மனித பேரவலத்தின் சாட்சியங்களாக இன்றும் உள்ளன. அந்த போரில் மட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி மரணித்த மற்றும் உரிமை போரில் மரணித்த அப்பாவி மக்களினதும் ஆத்மாக்கள் இன்னும் உறங்கவில்லை. அந்த ஆத்மாக்களுக்கான நீதியை கொடுக்க 17 வருடங்காக மாறி மாறி ஆட்சி பீடமேறிய இலங்கை அரசாங்கமும் முன்வரவில்லை. சர்வதேச தேசமும் முன்வரவில்லை.
தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அள்ளுண்ட அலையால் தமிழ் மக்களது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக போராடும் நிலையே தொடர்கிறது. தென்னிலங்கையின் மனங்களில் மாற்றங்களை காணமுடியவில்லை. 17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நிறைவடைந்துள்ளது. அவர்களுக்கான நீதி என்பது இன்றும் கானல் நீராகவே உள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 20 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.