இலங்கையில் புதிதாக வாகனம் வாங்கியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
புதிய கொள்முதல் செயல்முறை நிறைவடைந்ததை தொடர்ந்து, வாகனப்பதிவு எண் அச்சிடும் பணிகள் ஜூன் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நேற்று (19) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடும் பணிகள்
ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம், வேரஹேர பகுதியில் தேவையான இயந்திரங்களை ஏற்கனவே நிறுவிவிட்டதாகவும், பணிகளைத் தொடங்குவதற்கான இறுதித் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் கொள்முதல் ஒப்புதல்களைத் தொடர்ந்து, வாகனப்பதிவு எண்களை அச்சிட்டு வழங்குவதற்கான ஒப்பந்தம், தனியார் நிறுவனத்திற்கு ஐந்து வருட காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உண்மைக்கு புறம்பான செய்திகள்
அந்நிறுவனத்துடனான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மார்ச் 10 அன்று கையெழுத்தானது, அதே சமயம் ஒப்பந்த நிபந்தனைகளின்படி, ஒப்பந்தம் கையெழுத்தான திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
டெண்டர் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அச்சிடும் பணி கிட்டத்தட்ட ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 4 லட்சம் பதிவு எண்கள் தேங்கிக்கிடப்பதாகவும் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
