அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..
வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, அரசாங்கத்தின் மிக ரகசியமான உள்வட்டத் தகவல்கள் கசிந்துள்ளனவா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்த ரகசியத் தகவல்களை முன்கூட்டியே சாதகமாக்கிக் கொண்ட இரு பிரபல தொழிலதிபர்கள், அரசாங்கத்தின் பில்லியன் கணக்கான வரி விதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக 4,000 வாகனங்களுக்கான கடன் கடிதங்களை (LC) அவசர அவசரமாகத் திறந்துள்ளதாகப் பாரதூரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளருமான நிரோஷன் பாதுக்க, மத்திய வங்கி வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அரசாங்கத்தின் மீதான இந்த அதிரடி குற்றச்சாட்டைப் பகிரங்கப்படுத்தினார்.
தகவல் கசிவு
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வரி அதிகரிப்பு வர்த்தமானியில் கையெழுத்திடப்படவிருந்த ரகசியத் தகவலை, தற்போதைய ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இரு வர்த்தகர்கள் முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி, கடந்த 15ஆம் திகதி ஒரு வர்த்தகர் 3,500 வாகனங்களுக்கும், மற்றொரு வர்த்தகர் 500 வாகனங்களுக்கும் சட்டவிரோதமான முறையில் முன்கூட்டியே கடன் கடிதங்களை (LC) திறந்துள்ளதாக நிரோஷன் பாதுக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தத் தகவல் கசிவு மற்றும் அரசாங்கத்தின் அனுபவமின்மை காரணமாக நாட்டுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த உள்ளக மோசடி காரணமாக, அரசாங்கத்திற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய 20 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாய் முற்றாக இழக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 40 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய கடன் கடிதங்கள் அவசரமாகத் திறக்கப்பட்டதால், சந்தையில் டாலருக்கான தேவை திடீரென எகிறியுள்ளது. இதன் விளைவாக, 323 ரூபாயாக இருந்த டொலரின் மதிப்பு, ஒரே நாளில் 11 ரூபாயால் உயர்ந்து 334 ரூபாயாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தச் செயல்முறையானது, கடந்த காலங்களில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையை விடவும் பாரதூரமான மற்றும் திட்டமிடப்பட்ட பெரும் நிதி மோசடி என அவர் குற்றம் சமத்தியுள்ளார்.
பொறுப்பை கைவிட்ட மத்திய வங்கி
இவ்விவகாரத்தில் தொடர்புடைய ஒரு வர்த்தகர், இதற்கு முன்னரும் வாகனங்களின் என்ஜின் கொள்ளளவைக் (Engine Capacity) குறைவாகக் காட்டி வரி மோசடி செய்த வரலாற்றைக் கொண்டவர் எனப் பாதுக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, எவ்வித டெண்டர் நடைமுறைகளும் இன்றி காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களும் இவருக்கே தற்போதைய அரசால் தாரைவார்க்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

தற்போதைய ஆட்சிப் பீடத்துடன் உள்ள அரசியல் செல்வாக்கே இதற்குப் பின்னணியில் இருப்பதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
40 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய இவ்வளவு பெரிய கடன் கடிதங்கள் திடீரெனத் திறக்கப்படும் போது, வர்த்தக வங்கிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை மத்திய வங்கி முற்றாகக் கைவிட்டுள்ளது என நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து முறையான விளக்கத்தைப் பெற தான் மத்திய வங்கிக்குச் சென்ற போதிலும், அதிகாரிகள் தனக்கு உரிய அனுமதியை வழங்க மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகப் பலவீனமும், அனுபவமின்மையுமே இந்த மாபெரும் நிதிச் சீரழிவுக்குக் காரணம் எனவும், இதன் இறுதி சுமையை நாட்டின் சாதாரண பொதுமக்களே சுமக்க நேரிடும் எனவும் நிரோசன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam