தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..!
ஒரு சமூகத்தின் அல்லது ஒரு இனத்தின் அறிவியல் மட்டம் என்னவோ? அந்த அறிவியல் மட்டத்திலிருந்து தான் அந்த இனத்திற்கான தலைவர்கள் தோன்றுவார்கள்.
அதேவேளை, அந்த மக்கள் கூட்டத்தின் அறிவியல் கொள்ளளவு என்னவோ? அந்த அறிவியல் கொள்ளளவுக்குள் இருந்தே அறிஞர்களும், ஞானிகளும், முற்போக்காளர்களும் தோன்ற முடியும். அறிஞர்களும் ஞானிகளும் தோன்றாத ஒரு இனம் இந்த பூமி பந்தில் நிலையாக வாழ்ந்திட முடியாது.
இந்த அடிப்படையில் அண்மைக்கால தமிழக அரசியலும் ஈழத் தமிழர் அரசியல் கருத்தியல்களும் சார்ந்து மிக ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு இருக்கின்றது.
தேசிய இனவிடுதலை
இந்தியாவில் வாழ்கின்ற தமிழக தமிழ்த்தேசிய இனமும் இலங்கைத் தீவில் வாழ்கின்ற ஈழத்தமிழ் தேசிய இனமும் மொழிவழியில் ஒரு தேசிய இனமாக இருந்தாலும்கூட இரண்டு பட்ட நிலத்தில் வாழ்வதனால் அவர்களை இரண்டு தேசிய இனங்களாகவே வரையறுக்க முடிகிறது.
அந்த அடிப்படையில் தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் செல்நெறியை அவதானித்தால் தேசிய இனம் என்ற வரையறைக்குள் அடங்குகின்ற ஈழத்தமிழ் தேசிய இனமும், தமிழக தமிழ்த்தேசிய இனமும் தமக்கான சுயமான ஒரு அரசை கொண்டு இருக்க வில்லை. இரண்டு தேசங்களில் வாழ்கின்ற தமிழ்த்தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசியல் முன்னெடுப்புக்களிலும் எந்தவித அறிவியல் முன்னேற்றத்தையும் காணவில்லை.

ஆகவே தமிழ்த்தேசிய இனம் பல்தேசிய இரண்டு இறைமைகளைக் கொண்ட அரசுகளுக்குள் அகப்பட்டு இருப்பதனால் இந்த இரண்டு தேசிய இனங்களும் விடுதலை அடைவது பிராந்தி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. ஆகவே அத்தகைய ஒரு சூழலில் ஒரு தேசிய இனம் விடுதலை அடைவதை இரண்டு அரசுகளும் தடுக்கும், அடக்கும், கொடுக்கும் கூட்டாக செயற்படுவர்.
இத்தகைய சூழமைவில் தேசிய இனவிடுதலை என்பது மிகக் கடினமானது. அதேவேளை நடைமுறையில் பல்வேறுபட்ட சிக்கல்கள் நிலவுகின்றன. இரண்டுபட்டிருக்கும் தேசிய இனங்களுக்கு இடையிலான புரிதல்கள், ஒத்துழைப்புக்கள், கருத்தியல் மாறுபாடுகள் மற்றும் தேசிய உணர்வோடு சிந்திக்க வைத்தல் போன்றவை மிகக் கடினமானதாகும்.
இந்த நிலைமைகள் இருந்த போதிலும் இந்தியா கூட்டாட்சி அரசுக்குள் வாழ்கின்ற தமிழகத் தமிழர்கள் ஒரு அரை அரசை கொண்டிருப்பதனால் தமிழக தமிழ்த்தேசிய இனம் தமக்கான உரிமைகளை தம்மால் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதினால் அவர்களுக்கான தனியான அரசு பற்றிய தேவை இன்றை வரை எழவில்லை. எழுவதற்கான தேவைகளோ, வாய்ப்புகளோ இல்லை.
பாக்கு நீரினை
அவர்கள் இந்திய இறையாண்மைக்குள் தமக்கான அதிகார பகிர்வையும், வளமான வாழ்வையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. அதனை அவர்கள் அறிவுமயப்பட்டு தமிழ் மாநிலத்தை பலப்படுத்துவதற்கான அரசியலை செய்வதே அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தமிழகத் தமிழ்த்தேசிய இனம் ஒரு அரை அரசை கொண்டிருப்பதனால் தமிழக தமிழர்களின் ஆதரவு ஈழத்தமிழ்த் தேசிய இனவிடுதலைக்கு அவசியம் தேவையாக உள்ளது. அந்தத் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுடைய உள்ளக அரசியல் விவகாரங்களிலோ உட்கட்சி விவகாரங்களிளோ ஈழத்தமிழர்கள் தலையிடாமல் தமக்கான அரசியல் விடுதலைக்கான ஆதரவை மட்டும் தமிழகத்திலிருந்து பெறுவதே பொருத்தமானது.

இரண்டு தமிழ்த்தேசிய இனங்களையும் பிரிக்கின்ற எல்லைக்கோடு பாக்கு நீரணையாக இருக்கிறது. அதுவே இந்த இரு தேசிய இனங்களையும் தொடுக்கின்ற தொடுபாலமாகவும் உள்ளது. அதுவே ஈழத்தமிழ் தேசிய இனத்தை தனித்துவமாக பேணவும், பாதுகாக்கவும் அரணாக உள்ளது.
நில அமைவிடம் சார்ந்து பாக்கு நீரினையால் பிரிக்கப்பட்டு இருக்கின்ற இந்த இரண்டு நிலப்பரப்பும் உலகளாவிய கேந்திர மூலோபாயம் மிக்க பகுதியாக இருப்பதனால் இந்த பிராந்தியத்தில் வல்லரசுகளின் நலன்களும், அவற்றின் விருப்பு வெறுப்புக்களும் புதிய ஒரு விடுதலை பெற்ற அரசு உருவாவதில் செல்வாக்கு செலுத்த வல்லன.
இப்போது உலகளாவிய அரசியலிலும், பிராந்தி அரசியலிலும், அரசுகளின் உள்ளக அரசியலிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டன. அது இந்தியாவின் தமிழகத்திலும், ஏனைய மாநிலங்களிலும் உருவாகியுள்ள மாற்றத்தை தற்போது அவதானிக்க முடிகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்றவகையில் ஈழத்தமிழர்களும் தங்களை மாற்றியமைக்க வேண்டிய தேவை எழுந்துவிட்டது.
முள்ளிவாய்க்கால் பேரவலம்
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் புதிய வழியை தேடாமல் சவங்களையும், பிரேத பெட்டிகளையும் காவிக் கொண்டு செத்தவீட்டு அரசியலையே செய்ய நினைக்கின்றோம். வெறும் ஒப்பாரி அரசியலினாலும், வரலாற்றைப் பேணுகிறோம் என கடந்தகால வீரதீர கதைகள் பேசுவதினாலும் இனத்திற்கு விடுதலை கிட்ட போவதில்லை.
இலங்கை நாடாளுமன்றத்துக்குள் கடந்துபோன வீரயுக பெருமை பேச்சுக்களும் இன்றைய அரசியலுக்கு எந்தப் பயனையும் தராது. எந்தவித இலட்சியப் பிரகடனங்களினாலும், மலையென உயரும் தியாகங்களினாலும், மாவீரர் துயிலும் இல்லங்களை நிரப்புவதனாலும், வீரதீர தூய்மை வாதங்களினாலும், வீரத்தலைவர்களை போற்றுவதனாலும், போகுமிடமெல்லாம் கொடியை தூக்கிப் பிடிப்பதனாலும், முடிந்துபோன அழிந்துபோன எங்கள் கோட்டை கொத்தளங்கள், படையணிகள் பற்றி விதந்து பேசுவதனால் மட்டும் நாம் ஒருபோதும் விடுதலை அடைய முடியாது.

நாம் பல களங்களில் வீரதீரமாக போராடி இருக்கலாம். களத்தில் பல சமர்களில் வெற்றியும் பெற்றிருக்கலாம். ஆனால் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தோல்வி அடைந்தோம். பல களங்களில் பெற்ற வெற்றிகள் எல்லாம் ஒரு யுத்தத்தில் தோல்வி அடைந்தமையினால் எதிரியிடம் நிர்வாணமாக சரணடைந்தோம் என்ற கசப்பான வலியை இன்னும் நாம் உணரத் தலைப்படவில்லை. அதிலிருந்து மீண்டெழவும் நாம் தயாரில்லை என்பதுதான் மிகவும் அவமானகரமானது.
புகழ்ந்து பேசக்கூடிய எல்லாவித பெருமைகளை விடவும் எதிரிகளின் காலடிகளில் வீழ்ந்து கிடக்கின்றோம் என்ற உண்மையே நடைமுறை எதார்த்தமாய் உள்ளது. இந்த வலியை மனதில் நிறுத்தியே எமக்கான புதிய மூலோபாயத்தை நாம் தேடவேண்டும். உலகளாவிய அரசியலில் அவரவர் நலன்களே முக்கியமானவை அந்த நலன்களை அடைவதற்கான வழிகளை மாத்திரமே நாம் தேடவேண்டும்.
தமிழின விடுதலை என்பது ஒரு யதார்த்த நிர்ணயம். புவிசார் அரசியலிலும், பூகோள அரசியலிலும் எதார்த்தத்தை கையாளும் வித்தையை நாம் கற்று அதனை அறிவியல் ரீதியில் பிரயோகிப்பதுதான் விடுதலைக்கான முன்னெடுப்பாகும். அறிவு, பொருள், செயல் ( Knowledge, Mater, Action) இவையே தத்துவார்த்த அடிப்படையில் தேசிய இனத்தின் வாழ்வுக்கும் விடுதலைக்குமான திறவுகோலாமாகும்.
தமிழ் தேசிய இனத்தின் அறிவியல் மட்டம்
ஈழத்தமிழரிடம் உள்ளும், புறமும், பிராந்தியத்திலும் என்ன நிலைமை இருக்கிறதோ அதனைக் கொண்டு பூகோள அரசியலில் காணப்படும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு அறிவை கருவியாகக் கொண்டு, சாத்தியமான விடுதலைக்கான செயற்பாட்டை (Praxis) முன்னெடுக்க வேண்டுமென தத்துவ அறிவு ஈழத் தமிழர்களுக்கு போதிக்கின்றது.
சாத்தியமற்ற கற்பனையான எந்த மேன்மையான செயற்பாடும் எதிரிக்கு சேவை செய்வதிலேயே முடிவடையும். எம் காலடியில் இருந்தே எமக்குரிய விடுதலைக்கான பாதை ஆரம்பமாகிறது.

காலடிகள் சகதிக்குள் இருந்தால் யதார்த்தபூர்வமான அந்த சக்தியிலிருந்து முதலாவது அடியை எடுத்து வைக்க வேண்டும். போர் தந்த வலியிலிருந்தும், பாடங்களிலிருந்தும் உன்னதமான சிந்தனைகளும், செயற்பாடுகளும் தோன்றியிருக்க வேண்டும். அவ்வாறு ஒரு புதிய சிந்தனையும் அறிவியல் மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை என்பதிலிருந்து தமிழ் தேசிய இனத்தின் அறிவியல் மட்டத்தின் கொள்ளளவை எடைபோட வேண்டும்.
இன்று தமிழக அரசியலில் புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கின்ற நிலைமையில் தமிழர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது. அந்தப் பின்னணியிலிருந்து தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையை நோக்கிய பயணத்தில் தமிழகத்துடனான நமது கடந்த கால அரசியல் போக்கினை உற்று நோக்குவோம். 1991ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்துடனான உறவு அறுந்து விட்டது மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளுடன் இருந்த உறவும் முறிவடைந்து விட்டது.
அரசற்ற ஈழத்தமிழர்கள் ஒரு அரை அரசை கொண்டுள்ள தமிழக மக்களின் அரசை சார்ந்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாத நிர்பந்தம். ஈழத்தமிழர் இருப்பை வட-கிழக்கு தாயகத்தில் தக்கவைக்கவும், தொடர்ந்து பேணவும் தமிழகத் தமிழர்களின் சகோதரத்துவ அரசியல்(brotherhood politics) ஆதரவு அவசியமானது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வியூகம்
தமிழர்களின் அரசறிவியல் நோக்கு நிலையிலிருந்து பார்க்கின்ற பொழுது இந்தியாவின் உள்ளக அரசியலிலோ, அல்லது தமிழகத்தின் உள்ளக அரசியலிலோ, அங்குள்ள கட்சிகளின் அரசியல்களுக்குள்ளோ ஈழத் தமிழர்கள் ஆதரவு, எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை ஒருபோதும் எடுத்துவிடக்கூடாது. அது ஈழத் தமிழர்களுக்கு அவசியமற்றது.
இன சகோதரத்துவ அரசியல் என்ற அடிப்படையிலும், ஈழத்தமிழர்கள் அளவால் சிறிய தேசிய இனம் என்ற அடிப்படையிலும் அளவால் பெருந்தொகை தமிழகத் தமிழர்களின் ஆதரவை நாடி நிற்பதும், அவர்களுடனான உறவை வளர்ப்பதும் அவசியமானது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் எந்த அரசியல் கட்சியையும் முதல் நிலைப்படுத்துவது மிக தவறானது.
யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, யாரை தமிழக மக்கள் விரும்பி தங்களுடைய அரசாங்கமாக தேர்வு செய்கிறார்களோ அவர்களுடன் ஒரு சுமூகமான உறவை வளர்ப்பதும் அந்த நல்லுறவை பேணிப் பாதுகாப்பதும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் வியூகமாக எப்போதும் இருக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் அனைத்து அரசியல் கட்சிகளும் எமக்குத் தேவையாக உள்ளார்கள்.அனைவரையும் நட்பு சக்திகளாக பேணி அனைவரிடத்திலும் ஒரு சுமூகமான உறவை உருவாக்க வேண்டியது அவசியமானது. அதுவே ஈழத்தமிழரின் சகோதரத்துவ அரசியல் (brotherhood politics) கொள்கையாக அமையவேண்டும்.
அரசியலில் நலன்களின் அடிப்படையிலேயே உறவுகள் மலர்கின்றன என்ற அடிப்படையில் ஈழத் தமிழர்களுடைய நலனுக்காக நமது நலன்களை நாம் அடைவதற்காக மட்டுமே நமது தமிழக அரசியலைக் பற்றி பேச வேண்டுமே தவிர தமிழகத்தின் உள்ளக அரசியல் முரண்களுக்குள் ஈழத் தமிழர்கள் சிக்கி விடக்கூடாது. யாரால் தமிழர்களுக்கு நலன் கிடைக்கிறதோ அவனே உண்மையான நண்பனாவான்.
இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற புதிய அரசியல் மாற்றம் என்பது ஈழத் தமிழர்கள் இந்தியா சார்ந்து எடுக்கக்கூடிய புதிய அரசியல் சிந்தனைக்கும் புதிய அரசியல் உறவைப் பலப்படுத்துவதற்குமான வழிமுறைகளும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளது.
கற்பனை வாதங்களையும், தூய்மைத்துவ வாதங்களையும் தூக்கி எறிந்து முற்றிலும் இன்றைய உலகளாவிய ஒழுங்குக்கு ஏற்ற வகையில் நடைமுறை சார்ந்து, பழைய கசப்பான அனுபவங்களை மறந்து அல்லது கடந்து எதிர்கால வாழ்வுக்காக எதிர்கால தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்காக இன்றைய தமிழ் தேசியவாதிகள் முற்றிலும் அறிவார்ந்த அரசியல் முடிவுக்குச் செல்ல வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தின் தேர்தல் அரசியல் புரட்சி ஈழத் தமிழர்களுக்கு புதிய பாதை ஒன்றை திறப்பதற்கான சூழலை எற்படுத்தி தந்துள்ளது. அதனை ஈழத்தமிழர் கெட்டியாக இறுகப்பிடித்து அயலக அரசியல் ஆதரவு கோரளை முன்னெடுக்க முடியும். ஈழ அரசியலுக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய புவிசார் அரசியல் அமைவிடத்தில் தமிழகம் இருப்பதனால் ஈழத்தமிழரின் அரசியலில் அவர்களுக்கு ஒரு துளக்கமான முதன்மைப் பாத்திரமும் பங்கும் உண்டு.
தற்போது முற்றிலும் புதியவர்களையும், புதிய சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும் கொண்ட த.வெ.க கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கின்ற போது ஈழத் தமிழர்கள் இந்த புதிய தமிழக அரசியல் சக்தியின் நிழலில் தம்மை ஆசுவாசப்படுத்தி தமிழ்த்தேசிய மீள்கட்டுமானத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.
ஏற்கனவே ஆட்சியிலிந்த இரண்டு திராவிட கட்சிகள் மீதும் ஈழத்தமிழர்களுக்கு அதிருப்தியும், நம்பிக்கையீனங்களும் உண்டு. முள்ளிவாய்க்காலில் தமக்கு ஏற்பட்ட மனிதப்பேரவலத்தை தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் இவர்கள் அதனைத் தவறவிட்டார்கள் என்ற மனவருத்தம் ஈழத் தமிழர்களிடம் நிறைவே உள்ளது.

இத்தகைய பின்னணியில் திராவிடக் கட்சிகளுடன் ஒரு சுமுகமான உறவை வளர்க்கவும், ஆதரவை பெறவும் முடியாமல் போய்விட்டது. ஆயினும் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நாம் புதிய செயலுக்கும் செல்வதே அறிவார்ந்த செயலாகும்.
இப்போது தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜே.விஜய் ஈழத்தமிழ் பெண்னை மணந்தவர் என்பதனால் புதிய கட்சியுடன் புதிய உறவை ஆரம்பிப்பதும், அணுகுவதும் இலகுவானது.
ஈழத் தமிழர்கள் தமிழக மக்களின் பெருவிருப்பைப் பெற்று அமைக்கப்படும் தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் தான் முதலாவது உறவை வளர்ப்பதற்கான சகோதரத்துவ அரசியல் வெளியுறவு கொள்கையை ஒன்றை உடனடியாக வகுப்பதும் செயல்படுத்துவதும் அவசியமாகும்.
இங்கே யதார்த்தபூர்வ முன்னெடுப்பு என்பது கண் முன் காணப்படும் யதார்த்தத்தை சரிவர மதிப்பீடு செய்து, அதற்குப் பொருத்தமாக மேற்கொள்ள வேண்டிய தக்க அணுகுமுறையை குறித்து நிற்கின்றது. அரசியலில் சரியானதை தேடுவதை விட பொருத்தமானதை தேடுவதும், தெரிவு செய்வதுமே இராஜதந்திரம் எனப்படும்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 41 நிமிடங்கள் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam