யாழ். மண்ணில் வாழும் மக்களுக்கான புதிய வேலைத்திட்டத்தை வரவேற்கும் ஆளுநர்
அவயவங்களை இழந்த எமது மக்களுக்கு ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் என்றும் இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கு உங்கள் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(26.06.2026) நடைபெற்ற யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தின் மீள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பி்டுள்ளார்.
செயற்கை கால் பொருத்தும் நவீன முறை
யாழ்ப்பாணம் - சுண்டிக் குளி, கொழும்புத்துறை வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இந்தியாவின் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் நவீன முறையை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி, பயனாளிகளுக்கு அதனை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட கட்டிடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கான செயற்கை கால்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய செயற்றிட்டமானது, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனங்கள் மற்றும் லண்டன் ஸ்கூல் ஒவ் கொமர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் அண்ட்ராடி ஆகியோரின் நிதியுதவி மற்றும் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், ஜெய்ப்பூர் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக எமது மண்ணில் அளப்பரிய சேவையாற்றி வருவதாகவும், போரால் எமது மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு, அவயவங்களை இழந்திருந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவர்களுக்கு அருமருந்தாக அமைந்தது இந்த நிறுவனமேயாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிறுவனம் எமது மண்ணில் இயங்கி இருக்காவிட்டால், எமது மக்களில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கான இலவச சேவை
இந்த நிறுவனத்துக்கு போதியளவான அரச உதவிகள் கிடைக்க பெறவில்லை எனவும், தான் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில், அப்போது அமைச்சின் செயலாளராக இருந்த சிவஞானசோதியின் ஒத்துழைப்புடன் சில உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருந்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.
இன்றும் எமது மண்ணில் விபத்துக்களாலும், நீரிழிவு போன்ற நோய்களாலும் பலர் தமது அவயவங்களை இழக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த நிறுவனத்தின் சேவை அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எமது மக்களுக்கு பொருத்தமான வகையிலும், உயர் தரத்திலும், இலகுவாக அணுகக்கூடிய முறையிலும் இங்கு செயற்கை அவயவங்கள் வழங்கப்படுகின்றமை விசேட அம்சமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவர் கோசலை மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிகச் செயலாளர் ஜெயகரன், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர்கள், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களான மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
