யாழ். மாநகர சபைக்கு புதிய மேயர் தெரிவா..! நீதிமன்றத்தை நாடுவோம் - மணி தரப்பு எச்சரிக்கை
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு புதிதாக மேயரை தெரிவு செய்ய முற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பதவியிலிருந்து விலகும் மேயர் வி.மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் 7 மேலதிக வாக்குகளால் கடந்த 21 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்டது.
வரவு - செலவுத்திட்டத்தை மீளச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் அவர் பதவி விலகுவதாக நேற்றைய தினம் கடிதம் மூலம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டம்
"வரவு - செலவுத் திட்டம் மீளவும் சமர்ப்பிக்கப்பட்டால் தோற்கடிக்கப்படும் என்பதால் பதவியைத் துறக்கின்றேன்" என்று மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய மேயருக்கான தெரிவு இடம்பெறுமாக இருந்தால், அதற்கு எதிராக நீதிமன்றதை நாடுவோம் என்று மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ( ஆனோல்ட் மேயராக இருந்த காலத்தில்) இரண்டு தடவைகள் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு தடவை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகர சபைக் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக, சபை கலைக்கப்படவேண்டும்.
அதற்கு முரணாக மேயர் தெரிவை நடத்த முயன்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



