யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளை அடியோடு புறக்கணித்த தமிழரசுக் கட்சி!
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று(15.1.2026) கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளது.
இந்தத் தகவலை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்ப்பாணத்துக்கு இன்று விஐயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார்.
அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை என எமது கட்சி முடிவெடுத்துள்ளது.

இதற்குப் பிரதான கரணம் "பிரஜாசக்தி" எனும் பெயரில் அரச இயந்திரங்களுக்குச் சமாந்தரமாக தமது கட்சியைச் சார்ந்தவர்களை கொண்டு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாம் பல எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளோம்.
உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களைத் திசை மாற்றிக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் கிடைக்காத இடங்களில் இத்தகைய செயற்பாட்டை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
சட்ட ரீதியாக உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைகளை வறுமை ஒழிப்பு எனும் பெயரில் நேரடியாக மத்திய அரசு செய்வதைச் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கண்டனம்
சுனாமி ஏற்பட்ட போது, வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்க அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முயன்றபோதே இதே ஜே.வி.பியினர்தான் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராகத் தடையுத்தரவைப் பெற்றனர்.
அதற்கு அவர்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம், அரச அமைப்புக்கு சமாந்தரமாக எந்தவொரு அமைப்பையும் செயற்பட அனுமதிக்க முடியாது என்பதே.

சுனாமியால் மிக மோசமாகப் பாதிப்படைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள் கட்டுமானம் செய்ய முடியாமல் செய்தவர்கள் அவர்கள்.
அதே சட்ட அடிப்படையில் அவர்கள் இன்று அரசாங்க நிறுவனங்கள், உள்ளூராட்சி சபைகள் ஊடாக சட்ட ரீதியாக செய்ய வேண்டியதை அதற்குச் சமாந்தரமாக, தமது கட்சிக்காரர்களை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கி அதன் ஊடாகச் செய்ய முயல்கின்றனர்.
அரச உதவிகள், நிவாரணங்கள், நிதிகளில் தங்களின் கட்சியை அவர்கள் வளர்க்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர்கள் பாவித்த அதே சட்டக் கோட்பாட்டை உபயோகித்து அதனை நிறுத்த முயற்சி எடுப்போம். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முதல் கட்டமாக ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.