நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுபாடு- நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இன்று (02.03.2026) எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகித்து வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு
ஏனைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மக்கள் தங்கள் வாகனங்களை வரிசையில் நிறுத்தி நீண்ட நேரமாக காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக பொதுமக்கள் எரிபொருளை கொள்கலன்களில் அதிகளவில் கொள்வனவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக தற்போது இலங்கையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அறிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. கொள்கலன்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை.
இதன் மூலம் எரிபொருள் பாவனையாளர்கள் சுமூகமான முறையில் தமக்கு தேவையான அளவு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நிலவி வரும் இந்த தட்டுப்பாடு இன்னும் ஓரிரு தினங்களில் சீரான நிலைக்கு திரும்பும் என எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் - தேவந்தன்
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு