8 கோடியே 14 லட்சம் மக்களின் வரிப்பணம் வீணாகிறதா..! கேள்வியெழுப்பும் மலையக மக்கள்
மக்களின் வரிப்பணத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும், பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எனினும், மலையகத்தின் கொட்டகலை பகுதிகளில் பல 8 கோடியே 14 லட்சத்து 575 ரூபா நான்கு சதம். ( 81,476,575.04) செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மக்களின் வரிப்பணம்
அத்தகைய திட்டங்களில் ஒன்றாக கொட்டகலை ரொசிட்டா நகரில் நிர்மாணிக்கத் தொடங்கப்பட்ட மூன்று மாடி பல்நோக்கு கட்டடத் திட்டம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
15.05.2015 ஆம் ஆண்டு; காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது இந்தத் திட்டத்தின் மூலம் பிரதேச சபை அலுவலகம், வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் அமைக்கும் நோக்கம் கொண்டிருந்தது.

எனினும், இரண்டு மாடிகள் வரை மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட நிலையில் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது, திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கட்டடம் முழுமையடையாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி காணப்படும் இந்தக் கட்டடம் தற்போது புதர்கள் சூழ்ந்தும், பராமரிப்பின்றியும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கல்களே காரணம் என நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.
மீண்டும் நிர்மாணப் பணிகள்
இந்த கட்டடம் முழுமையாடையாததனால் தற்போது கொட்டகலை பிரதேச சபை கோயில் மண்டபத்திலேயே இயங்கி வருகின்றன பொதுமக்களின் கருத்துப்படி, இந்தக் கட்டடம் முழுமையடைந்திருந்தால் அரச அலுவலக சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி உருவாகியிருக்கும். அதேபோல் வர்த்தக நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு பிரதேச பொருளாதாரத்திற்கும் ஆதரவாக இருந்திருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மீண்டும் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுமா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படாமல் முழுமையடைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இந்தக் கட்டடம், அபிவிருத்தித் திட்டங்களின் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளதுடன், பொதுமக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.