இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை! உடனடியாக பணத்தை மீளப் பெறுமாறு அறிவிப்பு
இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கை
பயிர்ச்செய்கை நிறுவனங்களின் பெயரில் மக்களிடமிருந்து பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் அதிகரித்து வருகிறது.

வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வை பிரிவினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
யாராவது ஒருவர் மக்களிடம் பணம் கேட்டு, ஏதாவது பயிர்ச்செய்கைத் திட்டத்தை மேற்கொண்டு மாதாந்தம் ஒரு தொகையையோ அல்லது இறுதியில் ஒரு பெரிய தொகையையோ தருவதாகக் கூறினால், அது வெளிப்படையாக மக்களின் வைப்புக்களைப் பெற்றுக்கொள்வதாகும். அது சட்டவிரோதமானது.
அது தொடர்பில் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்ததும், நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானித்து, அதற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
பயிர்ச்செய்கைத் திட்டங்களைச் செய்வது நல்லது. அது எவருடைய சொந்தப் பணத்தில் செய்யப்பட்டு வளர்ச்சியடைகிறது என்றால் அதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
சுப்பர் மார்க்கெட்கள்
அந்தத் திட்டங்கள் மூலம் பணம் ஈட்டி, மேலும் பல திட்டங்களை, சுப்பர் மார்க்கெட்கள் போன்றவற்றை ஆரம்பித்தாலும் பரவாயில்லை. ஆனால், அவர்கள் மக்களிடம் சென்று இவற்றில் முதலீடு செய்யுங்கள், நாங்கள் மாதாந்தம் பணம் தருகிறோம், இறுதியில் பெரிய பணம் தருகிறோம் கூறினால் அதில் சிக்கல் உள்ளது.

எனவே, இவ்வாறானவர்கள் மக்களிடம் பணம் கேட்டால், அது ஒருவித அதிகாரப்பூர்வமற்ற முறையில் வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, குறிப்பாக இவ்வாறான விடயங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே பணம் வழங்கியவர்கள் இருந்தால், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின், முதலீடு செய்த பணத்தை உடனடியாக மீளக் கோருவதே சிறந்த வழியாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.