நாட்டிலிருந்து மாயமான பில்லியன் கணக்கான டொலர்! மோசடி குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்
மோசடியான முறையில் நாட்டை விட்டு வெளியில் கொண்டு செல்லப்பட்ட பெருமளவிலான பில்லியன் டொலர் குறித்து விசேட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
சுங்கத்திணைக்களம், வங்கி மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மோசடியான இறக்குமதி பரிவர்த்தனைகள்
''மோசடியான இறக்குமதி பரிவர்த்தனைகள் ஊடாக கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் இருந்து 715 மில்லின் டொலர் வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முறையற்ற தந்தி பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக தற்போது இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவது பரவலாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமையும் இவ்வாறான தன்மையில் காணப்படுகிறது.
சட்டங்கள் மீது குற்றச்சாட்டுக்கள்
இலங்கை சுங்கத் திணைக்களம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படுவதில்லை. இந்த மூன்று பிரதான தரப்பிடம் முறையான தொடர்பாடல் இல்லாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுகிறார்கள்.
நிறுவன கட்டமைப்புக்கள் சிறந்த முறையில் செயற்படாத பின்னணியில் சட்டங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
புதிய சட்டங்களை இயற்றும் போது வரி செலுத்தி சட்டத்தின் பிரகாரம் செயற்படும் இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.