உலகக் கிண்ண போட்டியில் ஈரானின் பங்கேற்பு.. கால்பந்து சம்மேளனத் தலைவர் வெளியிட்ட தகவல்
உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்காமல் இருப்பது ஈரானுக்குக் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய 'இராஜதந்திர சொத்தை' இழப்பதற்குச் சமமாகும் என்று அந்த நாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான நேர்காணலில் பேசிய அவர், உலகக் கிண்ணம் போன்ற சர்வதேச அரங்கில் ஈரான் பங்கேற்பது நாட்டின் வெளிவிவகார கொள்கை மற்றும் செல்வாக்கிற்கு மிகவும் முக்கியமானது என்றும், இதில் கலந்துகொள்ளா விட்டால் ஈரான் ஒரு வலிமையான வாய்ப்பை இழந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஈரான் அணி
கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து உலகக் கிண்ண தொடரில் ஈரானின் பங்கேற்பு குறித்து பல்வேறு நிச்சயமற்ற சூழல்கள் நிலவி வந்தன.

இந்நிலையில், ஈரான் கால்பந்து சம்மேளனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஈரான் அணி இப்போட்டியில் பங்கேற்கும் என்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.
இருப்பினும், ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கவலைகளைப் போட்டி நடத்தும் நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு கால்பந்து தலைவர் மெஹ்தி தாஜ் 10 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதில் குறிப்பாக, ஈரான் நாட்டு வீரர்களுக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருக்கக்கூடாது, தேசிய அணி ஊழியர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், விமான நிலையங்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் அவர்கள் விளையாடும் மைதானங்களுக்கான பயணப் பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் அந்த நேர்காணலில் விரிவாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.