வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக நடித்து ஏமாற்றிய பெண் தொடர்பில் விசாரணை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றுமுன் தினம் (09.10.2022) விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த சந்தேகநபரான பெண் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் வழங்கிய தகவல்
கைது செய்யப்பட்டவர் வங்கி கணக்கின் ஊடாக ஒருவரிடம் சுமார் 8 இலட்சம் ரூபா வீதம் பணம் அறவிட்டுள்ளதுடன் கடல் வழியாக நியுஸிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறியே இம்மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மோசடி செய்து ஏமாற்றிய இலட்சக்கணக்கான பணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பெருந்தொகை பணத்தை சந்தேகநபருக்கு வழங்கியவர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடு அளிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
பண மோசடி
இந்நிலையில் சந்தேகநபர் ஏமாற்றி மோசடி செய்த பணத்தை எங்கு அனுப்புகின்றார் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சந்திவெளி ஏறாவூர் கல்முனை உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



