மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்கா - ஈரான்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ள சூழலில், இரு நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகள் ஓமான் தலைநகர் மஸ்கட்டில் ரகசிய மற்றும் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) கூறுகையில், "நிச்சயமாக இது ஒரு நல்ல ஆரம்பம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆலோசனைகள் முடிந்து இரு நாட்டு அதிகாரிகளும் தங்கள் தலைநகரங்களுக்குத் திரும்பியுள்ளனர். அமெரிக்க தரப்பில் டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் பங்கேற்றனர். ஈரானிய தரப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி வழிநடத்தினார்.
அணுசக்தித் திட்டம்
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முடக்க வேண்டும் என்றும், செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை (சுமார் 400 கிலோ) அகற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

ஆனால், தனது ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய ஆதரவு குழுக்கள் குறித்த கோரிக்கைகளை ஈரான் இறையாண்மை மீறல் எனக் கூறி நிராகரித்துள்ளது. சமீபத்தில் ஈரானில் வெடித்த மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதத்தில் சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இதனால் கோபமடைந்த ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் அந்நாட்டின் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கை
இதற்காக ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் ஒரு பிரம்மாண்ட 'போர்க்கப்பல் படையை' அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளது. "அமெரிக்கா தாக்கினால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்துவோம்" என்று ஈரான் சபதமிட்டுள்ளது.

இருப்பினும், 1979 புரட்சிக்குப் பிறகு தற்போதைய ஈரான் அரசு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால், இந்தப் பேச்சுவார்த்தையை ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கும் ஒரு கடைசி வாய்ப்பாக ஈரான் பார்க்கிறது.
இந்தச் சூழலைத் தணிக்க எகிப்து, துருக்கி மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறுகையில், "பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிப்பதில் தவறில்லை, ஆனால் அணுசக்தி விவகாரத்தைத் தாண்டி பல விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் மூளுமா அல்லது ராஜதந்திர ரீதியாகத் தீர்வு எட்டப்படுமா என்பதை வரும் வாரங்கள் தீர்மானிக்கும்.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri