இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனது விஜயத்தின் போது இந்தியத் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து முக்கிய இருதரப்புப் பேச்சுகளை முன்னெடுக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை
இந்த விஜயத்துக்கான ஆரம்பகட்ட முன்னேற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையில் நேற்று(06.04.2026) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள இந்திய நிதியுதவித் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரேய் குல்கர்னி, அரசியல் ஆலோசகர் கலாநிதி ராம்பாபு மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் காமகே உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.