இலங்கையில் அதிகரிக்கும் மரணம் : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவிப்பு
இலங்கையில் புகைத்தல் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் மரணத்தைத் தழுவுவதாகவும் வருடத்துக்குச் சராசரியாக 20 ஆயிரம் இலங்கையர்கள் மரணிப்பதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நேற்று(26) இடம்பெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்

இந்த வருடத்திற்கான உலக புகையிலை எதிர்ப்புத் தினம் 'சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்' என்ற கருப்பொருளில் இடம்பெறவுள்ளது என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ஆம் திகதி சர்வதேச
புகைத்தல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு
விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புகைப்பொருள் பாவனையின் பாதிப்புக்கள்
புகைப்பொருள் பாவனையானது சூழலை மாசடையச் செய்யும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். குறிப்பாக, சிகரட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன. அத்துடன் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சிகரட் உற்பத்தியினால் 2 மில்லியன் டொன் கழிவுகள் தேங்குகின்றன எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும், சிகரட் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பிரதான மூலப் பொருளான புகையிலை பயிர் செய்கையானது சூழலிற்கு பாரியளவில் தீங்கு விளைவிக்கின்றது.
இரசாயன பொருட்களின் பாவனையால் புகையிலை உற்பத்தி செய்யப்படும் மண் வளமற்றுப் போவதுடன் அரிய வகை உயிரினங்கள் அந்த மண்ணில் வாழ்வதும் குறைவடைந்து நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியிருக்கின்றன.

சிகரட் உற்பத்தி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தினமும் இறப்பதால் அந்த வெற்றிடத்தை பூரணப்படுத்துவதற்காக அந்நிறுவனம் இளைஞர்களையும், சிறுவர்களையும் பிரதானமான இலக்காக கொண்டுள்ளது.
எமது நாடு தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதோடு, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இந்நிலையில் வீணாக சிகரட்டிற்கு செலவழிக்கபடுவதால் மிகுதியாக இருக்கின்ற டொலர்களையும் பிரித்தானியா, அமெரிக்கா சுரண்டியெடுக்கின்றன.
சிகரட் நிறுவனத்திடம் வரி அறவிடப்பட்டாலும் அத்தொகையையும் விட பாரிய தொகையொன்று புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்களிற்கு செலவிடப்படுகின்றது.
அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்த போதிலும் சிகரட்டிற்கான விலை மிகவும் குறைவான சதவீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
அதிகரிக்கப்பட்ட விலையின் அளவானது சிகரட் உற்பத்தி நிறுவனத்திற்கு இலாபத்தை ஈட்டித்தரும் விதமாகவே அமைந்துள்ளது. இதன் பின்புலத்தில் சிகரட் உற்பத்தி நிறுவனத்தின் தலையீடு இருப்பதாகவே துறை சார்ந்த நிபுணர்களினால்
சந்தேகிக்கப்படுகின்றது.
புபுது சுமணசேகரவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்
சிகரட் பாவனையினால் ஏற்படும் சூழல் பாதிப்புக்களைகளையும், சமூக ,பொருளாதார, சுகாதார பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
சிகரட்டிற்கு செலவாகும் பணத்தை சேமித்து பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க பாவனையாளர்களை ஊக்கப்படுத்தல்.
புகைத்தல் எதிர்ப்பு தினத்தை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி புகைத்தல் பாவனையை நிறுத்துவதற்கு ஊக்கமளித்தல்.
அரசாங்கத்திற்கு இலாபமீட்டும் வகையில் சிகரட் மீதான வரி அறவீட்டு முறைமை ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தல்.
சிகரட் உற்பத்தி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து அவற்றிலிருந்து இளைஞர்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு முயற்சித்தல் போன்ற பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
| புலம்பெயர் உண்டியல் முறையால் தடுமாறும் இலங்கை! அரச வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி (Video) |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5